Jean-Claude Carrière என்ற புகழ்பெற்ற பிரெஞ்ச் சினிமா

By News Room

Jean-Claude Carrière என்ற புகழ்பெற்ற பிரெஞ்ச் சினிமா கதாசிரியர் இயக்கிய குறும்படம் இது.
உன்னத நாகரீகத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் பாரீஸ் மாநகரம். இந்நகரில் வாழும் ஒரு இளம் தம்பதிகள். அன்று அவர்களது மணநாள் ஆண்டுவிழா. தாங்களிருவரும் சேர்ந்து விருந்துண்ண வேண்டுமென்ற ஆர்வத்தில் மனைவி விதவிதமான சமையல் செய்து கணவனின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறாள்

மனைவிக்காக மலர்ச் செண்டு வாங்கிவந்து அவளை அசத்த வேண்டுமென்று கடைவீதிக்குச் செல்கிறான் கணவன். அவனது கார் பாரீஸ் நகர போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, வாகனங்கள் ஓட்டுவதற்கு சிரமமான கடைவீதியில் வாகனங்களின் வரிசையில் சிக்கி கணவன் தத்தளிக்கின்றான். 

பொறுமையிழக்காமல் தன் திறமையை எல்லாம் பயன்படுத்தி பல மணிநேரம் கழித்து கடைசியில் ஒரு பெரிய மலர்ச்செண்டை வாங்கியே விட்டான். போக்குவரத்து நெரிசலிலிருந்து மீண்டு வெளியேறுகிறான். தன் ஆசை மனைவிக்கு அந்த மலர்ச்செண்டை அளிப்பதற்காக ஆவலுடன் வீடு நோக்கி புறப்படுகிறான்.

வீட்டில் மனைவி காத்து காத்து இறுதியில் சோர்ந்து போகிறாள். பொறுமையிழந்து இறுதியில் தான் ஒருத்தியாகவே உணவருந்தி விட்டு - பின் உறங்கியும் போகிறாள். 

கணவன் வீட்டிற்கு வந்து சேர்கிறான். அவனது போராட்டத்தில் மலர்ச் செண்டு வாடி வதங்கிப் போய்விடுகிறது. உறங்கிப் போன மனைவியைப் பார்த்து பெருமூச்சுவிடுகிறான். மீதமிருக்கும் உணவை தனியாக உண்ணத் தொடங்குகிறான்.

மனித உறவில் எப்போதோ சில பொழுதுகளில் மட்டும் வரும் ஓரிரு மகிழ்வான நொடிகளையும் பாழ்படுத்திவிடும் நமது நகரப் பண்பாட்டின் அவலத்தை மென்மையாகவும் நுட்பமாகவும் - நையாண்டி செய்வதே இப்படத்தின் சிறப்பு.

.
மேலும்