ஓர் உண்மை சம்பவம் - வாழ்க்கை ஒரு வட்டம்!

By saravanan

காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட என் மனைவி, நகராமல் அப்படியே நின்றாள். 'என்ன' என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன்.

உங்கப் பையனும் மருமகளும் நாளை காலையில ஹனிமூன் முடிஞ்சூ சிம்லாவிலேர்ந்து திரும்பி வராங்க. சரி. அதுக்கென்ன இப்போ?

அவங்க தங்க ரூம் வேண்டாமா. அந்த ரூம்லதான உங்க அம்மா தங்கியிருக்காங்க. இவ்வளவு நாள் இருந்தது போதும். அவங்கள ஹாலுக்கு ஷிப்ட் பண்ணச் சொல்லுங்க. வாஸ்தவம்தான, முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தந்தை கட்டிய வீடு.பாத் ரூம் அட்டாச்சுடன் இரண்டு படுக்கையறைகள், ஹால், அதிலும் அட்டாச்டு பாத்வசதி உண்டு.

சமையலறை; டைனிங் ரூம் ; பூஜையறை என்று விஸ்தாரமாய் கட்டப்பட்ட வீடு. இப்போது என் அம்மா தங்கிக் கொண்டிருக்கும் அறைதான் என் தந்தை உபயோகித்தது. நான் இருக்கும் படுக்கையறையை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தி வருகிறேன். எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள்வரை என் தந்தை உயிருடன் இருந்தார்.

இன்றுவரை தன் ரூம் என்ற உரிமையுடன் இருந்து வருகிறாள் அம்மா. இப்போது தடாலென்று ஹாலுக்கு வரச் சொன்னால். அதுவும் உறவினர், நண்பர்கள் அடிக்கடி வருவர். ஹாலில் உட்கார்ந்தபடி தான் பேசுவர். அது அம்மாவுக்கு இடைஞ்சலா இருக்காதா? தனக்கென்று இருக்கும் பிரைவேஸி இல்லாமல் எப்படி மீதியிருக்கும் காலத்தை தள்ளுவாள்? நினைக்கும்போது தொண்டையை அடைத்தது எனக்கு.

என்ன பதில் இல்ல. உங்களுக்கு சொல்ல கஷ்டமாயிருந்தால் நான் உங்கம்மாக்கிட்டப் பேசறேன். ஹாலுக்கு ஷிப்ட்டாகி வாம்மா என்று நான் கேட்பதைவிட என் மனைவியே கேட்பதுதான் சரி என மனதில் பட்டது. சரி வைதேகி! நீயே கேட்டுடு என்றேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் வைதேகி என் அம்மா படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள். அத்தை! குரல் கேட்டதும் அம்மா விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள். நாளைக் காலை உங்க பேரனும் அவன் பெண்டாட்டியும் டூர் முடிஞ்சு திரும்பி வராங்க. அவங்க தங்க ரூம் வேண்டாமா. நீங்க காலிபண்ணிக் கொடுத்தால் தானே அவங்க இங்க தங்க முடியும். தயவு செஞ்சு நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு ஹாலுக்கு வரப் பாருங்க என்று கூறி விட்டுத் திரும்பினாள்.

அவள் அடுக்களைக்குள் நுழைந்ததும் நான் அம்மா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தேன் . அம்மாவைப் பார்க்க பாவமாயிருந்தது. பிரம்மை பிடித்தால் போல் அமர்ந்திருந்தாள். இதுவரை ஸ்வாதீனத்தோடு உரிமை கொண்டாடிய பிரைவேட் ரூம் தனக்கு கிடையாது இனி கிடையாது என்பதை அவளால் தாள முடியவில்லை.

அம்மா அருகில் கட்டில் மீது உட்கார்ந்தேன். என் கைகளை ஆதூரத்துடன் பற்றிக் கொண்டாள். அவள் கைகள் நடுங்கின. உனக்கு இஷ்டமில்லேன்னா நீ ஹாலுக்கு வரவேணாம்மா. இங்கேயே இருந்துக்கோ. மேலுக்குச் சொல்லி பெருமூச்சொன்றை விட்டேன்.

அது கூடாதுடா ராகவா. சின்னஞ் சிறுசுகள். அதுங்க ஹால்ல தங்க முடியாது. எனக்கென்ன, நான் ஒண்டிக்கட்டை. ஹாலுக்குத்தானே போகப் போறேன். வீட்டைவிட்டு இல்லையே. அம்மா இப்படிச் சொன்னதும் எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். சிறிதுநேரம் மெளனமாயிருந்த அம்மா தொடர்ந்தாள்.

ராகவா! நீ குழந்தையா இருந்தபோது, இதே கட்டில்லதான் என்னோட படுத்திருந்தே. உடம்புக்கு முடியாம நான் இருக்கறபோது உங்கப்பா சாதம் பிசைந்து கொண்டு வந்து இந்தக் கட்டில்ல உட்கார்ந்துதான் உனக்கு சாதம் ஊட்டுவார். எத்தனை தடவைகள், அதெல்லாம் மறக்க முடியுமா? கைகளை என்னிடமிருந்து விடுவித்து கட்டிலை ஆதங்கத்துடன் தடவிப் பார்த்துக் கொண்டாள். சட்டென என்னை நோக்கித் திரும்பிய அம்மா, டேய் ராகவா! இன்னிக்கு ராத்திரி மட்டும் என்னை இங்க தங்கவிடுடா. நாளை உதயத்தில் நான் ஹாலுக்கு வந்துடறேன் என் கையைப் பிடித்து கெஞ்ச, துக்கம் பீறிட்டது எனக்கு. சரிம்மா! நீ படுத்துத் தூங்கு ! இன்னும் கொஞ்ச நேரம் அங்கு தங்கினால் நான் ஓ வென்று அழுதுவிடுவேன், என எண்ணி அம்மாவைப் படுக்கவைத்து, என் அறைக்குத் திரும்பினேன்.

என் சிந்தனை பூராகவும் அம்மாவைப் பற்றியே இருந்தது. அம்மா கூச்ச சுபாவம் உடையவள். யாராவது அறைக்குள் இருந்தாலே உடனே எழுந்து உட்கார்ந்து விடுவாள். உடம்பு முடியாமல் போனாலும் உட்கார்ந்தபடிதான் இருப்பாள். அதற்காகவே நாங்கள் யாராயிருந்தாலும் ஐந்து நிமிடமோ அல்லது பத்துநிமிடமோ இருந்துவிட்டு வெளியேறிவிடுவோம். அடிக்கடி பாத்ரூம் போக எழுந்து கொள்வாள். ஹாலில் அடிக்கடி யாராவது நடமாடிக் கொண்டே இருப்பர். அதோடு ஹாலில்தான் டிவி இருக்கு. டிவி புரோக்ராம்களை என் மனைவியும், மகனும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பர்.

இது அம்மாவுக்குப் பெரிய தலைவலியாக இருக்குமே. நினைக்க நினைக்க நெஞ்சில் வேதனை பிடுங்கித் தின்றது. 'இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்க வேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்பது தவறு இல்லையா?'' என்று வைதேகியிடம் சொல்லிட வேண்டியது தான் என நினைத்துக் கொண்டே தூங்கி விட்டேன். ஆனால் மறுநாள் காலை அம்மா இதற்கொரு விடை கொடுத்தாள்; ஆம். அம்மா நள்ளிரவே காலமாகி விட்டாள்.

ஹாலில் இருந்துகொண்டு தான் அவஸ்தைப்பட்டு அதனால் பிறத்தியாருக்கும் கஷ்டம் கொடுப்பதை விரும்பாமல் போய்ச்சேர்ந்துவிட்டாள். அம்மாவின் காரியங்கள் நடந்து முடிந்தன. அன்று இரவு அம்மாவைப்பற்றி சிந்தனையோடு கட்டிலில் அமர்ந்திருந்தேன். வைதேகி என்னருகில் வந்து நின்றாள். என்ன அம்மாவைப்பத்தி சிந்தனையா? நான் பதிலேதும் சொல்லவில்லை. அவளே தொடர்ந்தாள்.

பாவம் உங்கம்மா ! இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம். ம்... என்ன செய்றது? என்றவள். ஆனால் ஒரு விஷயத்த கவனிச்சீங்களா? 'என்ன' என்பதுபோல் அவளைப் பார்த்தேன். கடைசிவரை ஹாலுக்கு வரல்ல. தன் ரூமுன்னு உரிமை கொண்டாடி, அங்கேயே உசிர விட்டாங்க. அவங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது.

சுருக்கென்று சொல்லிவிட்டு அகன்றாள் வைதேகி அம்மாவை வெளியேத்தணும்னு ரூமைக் கேட்டாளா? இல்ல, பையனை வைக்கணும்னு ரூமைக் கேட்டாளா? அப்பா உயிருடன் இருந்திருந்தா அந்த ரூமை கேட்டிருப்பாளா? அம்மா தனியா இருந்தது அவங்களுக்கு பலவீனமோ? அம்மா ''நான் தனியா இல்ல, பையனோடு தான் இருக்கேன்னு' சொன்ன நம்பிக்கையைக் கூட காப்பாத்த முடியலையோ?

அவளை அழைத்து ''இந்த வீடு அப்பாவும், அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்டது தவறு இல்லையா?''என்று சொல்ல நினைக்கிறேன்; முடியவில்லை;

இது என்னுடைய கையாலாகதத் தனமோ? நான் மட்டும் தான் இப்படியா? இல்லை, எல்லா ஆண்களும் இப்படித் தானா? பெண்' இருந்தும் 'சன்' இருந்தும் பல அப்பாக்களை இன்று 'பென்சன்' தான் காப்பாற்றுகிறது. பணத்தால் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து விடுமா.

ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும் என்னை ஏன்னு கேட்க ஆளேயில்லை என்ற வாக்கியம் வயதுக்கேற்ப மாறும். இளமையில் கர்வமாக முதுமையில் பரிதாபமாக!

வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி நமக்கு எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் பெற்றவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அன்னையின் மடியில் தலை வைத்து அயருங்கள். தந்தையின் கரங்களை பிடித்து கொண்டு கடைவீதிக்கு செல்லுங்கள்.

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணருங்கள். இன்று நீங்கள் பெற்றோரை ஆதரித்து அரவணைத்தால், நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களை ஆதரிப்பர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமா இதைவிட வேறு புண்ணியமும் வேண்டுமா ?

.
மேலும்