ஒரு பெண்ணின் உள்ள குமுறல் என்ன?

By News Room

இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக்கிட்டே இருக்குறது.

ஒவ்வொரு நாளும் சமைக்கணும், நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கணும், புதுசு புதுசா சமைக்கணும், ருசியா சமைக்கணும், அது எல்லார்க்குமே பிடிக்கணும், உப்பு கூடிடக் கூடாது, சோறு குழைஞ்சிடக் கூடாது, பிடிக்காத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது, ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது, இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்.. வேஸ்ட் பண்ணிடக் கூடாது. இருக்குற காச வச்சு சமைக்கனும்.

பட்ஜெட் இடிச்சிடக் கூடாது.

ஒவ்வொரு நாளும் விடியுறப்போ, இன்னைக்கு என்ன வாங்கலாம், என்ன சமைக்கலாம், வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு யோசிச்சே  விடியும்.

சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் கழுவி வைக்கனும்.

இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும். பகல் சமைச்சதை கழுவுறப்போ திரும்ப இரவுக்கும் இதையே பண்ணனுமேன்னு மனசுல யோசிக்கும். நாளைக்கும் முதல் இருந்து இது எல்லாமே பண்ணனும்லன்னு யோசிக்கும். ஆனாலும், நாளைக்கும் விடியும். நாளைக்கும் பசிக்கும். நாளைக்கும் சமைக்கனும்.

சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டர் இல்ல.

ஆனா.. தொடர்ந்து நாலு நாளைக்கு சமைக்குறது மேட்டர் தான். அதையே நாப்பது நாளைக்கு சமைச்சா?

நாப்பது வருசமா சமைச்சுக்கிட்டே இருந்தா?

சமைக்குறதுல இருக்குற சவால்கள் எல்லாம் புரியுது.

கஷ்டம் தெரியுது. வெறுக்குது...

இவ்வளவும், எனக்காக மட்டும் சமைக்குறப்போ. இதுவே இன்னும் அஞ்சு பேர்க்கு சேர்த்து சமைச்சா?

அந்த அஞ்சு பேருக்குமே வேற வேற டேஸ்ட் இருந்தா?

அந்த அஞ்சு பேருமே, அவர்களுக்கு சமைச்சுக் கொடுக்கத் தான் நான் பிறந்ததேன் என்கிற நினைப்புல இருந்தா?

உக்கார்ந்த இடத்துல இருந்துக்கிட்டே சாப்பாட்ட கொண்டு வரச் சொன்னா?

அதுல உப்பு இல்ல, இதுல உறைப்பு இல்லன்னு கம்ப்ளய்ன் பண்ணா?

சாப்பிட்டு அப்படியே அதே இடத்துல விட்டுப் போனா?

நம்ம வீட்டுல நமக்காக சமைக்குறவங்கள நாம எந்த அளவுக்கு கவனிச்சிருக்கோம்?

எந்தளவு அங்கீகரிச்சிருக்கோம்?

எந்தளவு சப்போர்ட்டிவ்வா இருந்திருக்கோம்?

முப்பது வருசமா‌ அம்மா சமைக்குறாங்க. இடையில வெளில வாங்கிக்கலாம் சொன்னா, சமைக்கிறதை தவிர வேற வேலை என்ன?

அதைக் கூட செய்ய முடியாதானு பேசுவோம், இங்க வந்து கிண்டலா பதிவு போடுவோம்.

என் வீட்டுல மனைவிக்கு கிச்சன் எங்க இருக்குதுனே தெரியாதுனு பதிவை போட்டுட்டு ஸ்மைலி எமோஜிஸ் வந்ததும், எதையோ சாதிச்ச மாதிரி, "சாப்பாடு ரெடியா?"ன்னு குரல் கொடுப்பாங்க.

இதுல வீட்டில் சமைப்பதே ஆரோக்கியம். இப்போல்லாம் தோசைலருந்து அதுக்கு தேவப்படற மாவு வரைக்கும் கடைல வாங்குறாங்க.

covid காலத்துல  எல்லாரும் வீட்ல சமைச்சி சாப்பிட்டு நிம்மதியா இருக்காங்கனு போஸ்ட்டா போட்டுத் தள்ளினாங்க..

மூணு வேளையும் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு நிம்மதியா இருப்பாங்க தான்..

ஆனா சமைக்கிறவங்க....

ஆறு நாள் அடுப்படி வேலையா இருக்கியே, இந்தா ஒரு நாள் உனக்கு ஓய்வுனு வீட்டில யாராவது சொன்னா யாரும் ஹோட்டல வாங்கிக்கிட்டா தேவலைன்னு யோசிக்க மாட்டாங்க..

இதுல தோசைக்கு  மாவு அரைக்குற அர்ப்பணிப்பு இருக்கே.. அதுக்கே ஆரத்தி காட்டணும்!

இன்னொரு தடவ வீட்டில சமையலைப் பத்தி பேச்செடுத்தாலோ, வெளியில வாங்கி சாப்புட்றதப் பத்தி பிரசங்கம் பண்ணாலோ, மாவரைச்சு கிரைண்டர்  கழுவி வச்சிட்டுத் தான் போகணும்னு ஸ்ட்ரிக்ட்டா  சொல்லிடுங்க, அதுக்கப்பறம் நக்கலா பேச மாட்டார்கள்.

கருவறை பத்து மாசம்னா, சமையலறை வாழ்நாள் மட்டும்.

தனக்குப் பசியில்லாத போதும், பிறர்க்காய் சமைக்கும் ஒவ்வொரு தாய்க்கும், மனைவிக்கும் சமர்ப்பணம்.

.
மேலும்