காளான் புலவ்
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப், பட்டன் காளான் - 12, பெரிய வெங்காயம் - 2, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுதூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி + பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - அரை கப்.
தாளிக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
காளானை இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். பாசுமதி அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீரில் ஊறவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, காளானையும் சேர்த்து வதக்கி தயிரை அதோடு சேருங்கள். அத்துடன் கரம்மசாலா தூளைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதித்தபிறகு, ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, நன்கு கிளறி மூடிவைத்து, ஒரு விசில் வந்தபிறகு, தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். விருந்துகளுக்கு ஏற்ற புலவு இது.
பலாக்காய் புலவு
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 3, எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கரம்மசாலா தூள் - ஒரு டீஸ்பூன், பலாக்காய் (துண்டுகளாக நறுக்கியது) - ஒரு கப்.
அரைக்க:
காய்ந்த மிளகாய் - 6-லிருந்து 8, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், இஞ்சி - ஒரு துண்டு.
தாளிக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1, நெய் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
பாசுமதி அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பலாக்காயை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், 2 டேபிள்ஸ்பூன் நெய்யையும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயையும் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, அரைத்த விழுதைச் சேருங்கள். பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வெங்காயம், பலாக்காய், சிட்டிகை உப்பு சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை நன்கு வதக்கி, மீதமுள்ள நெய், தேவை யான உப்பு, வடித்த சாதம் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கலந்து இறக் குங்கள். அருமையான சுவை யில் ருசிக்கும் இந்த பலாக் காய் புலவு.
சீஸ் புலவு
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 8 பல், உப்பு - தேவையான அளவு, துருவிய சீஸ் - அரை கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாசுமதி அரிசியை ஊறவைத்து, உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, வடித்த சாதம், துருவிய சீஸ், சிறிது உப்பு சேர்த்து இறக்குங்கள். மிக எளிமையாக செய்யக்கூடிய புலவு என்றாலும் சீஸ் சுவையுடன் பிரமாதமாக இருக்கும்.
குறிப்பு:
எல்லா வகை பிரியாணிகளுக்குமே நாட்டுத் தக்காளி உபயோகித்தால், கூடுதலான ருசி கிடைக்கும். பாசுமதி அரிசி ஒரு கப் அளவுக்கு ஒன்றரை கப் தண்ணீர்தான் வைக்கவேண்டும். அரிசி சிறிது பழையதாக இருந்தால், ஒன்றே முக்கால் கப் தண்ணீர் வைக்கலாம்..