Breaking News :

Tuesday, April 15
.

கேழ்வரகு மாவு கார கொழுக்கட்டை செய்வது எப்படி?


பள்ளி மற்றும் கல்லூரி முடித்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சத்தான ஈவினிங் டைம் ஸ்நாக்ஸ் கொடுக்க மீண்டும் என்பது தாய்மார்களின் விருப்பமாக இருக்கும். அந்த வகையில் கேழ்வரகு மாவு வைத்து அருமையான காரக்குழக்கட்டை ஒன்று செய்து கொடுத்துப்பாருங்கள். மாலை நேரம் டீ, காபியுடன் இந்த காரக்குழக்கட்டை சாப்பிடும் பொழுது திருப்தியாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். கேழ்வரகு மாவு காரக்குழகட்டை செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இந்த கொழுக்கட்டை செய்வதற்கு நாம் ஒரு கப் கேழ்வரகு மாவு பயன்படுத்த வேண்டும். ஒரு அகலமான கடாயில் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு கப் கேழ்வரகு மாவை அதில் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து இந்த மாவினை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி சற்று சூடு தணிய வைக்க வேண்டும்.

அந்த நேரத்தில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரியவெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், பாதி தக்காளி பழம் பொடியாக நறுக்கியது சேர்த்து வதக்க வேண்டும்.

இதனுடன் காய்கறிகள் சேர்த்து சமைக்க ஆசைப்பட்டால் பொடியாக நறுக்கிய கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை பயன்படுத்தலாம். வெங்காயம் மற்றும் காய்கறிகள் நன்கு வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். இதனுடன் விருப்பப்பட்டால் அரை கப் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் சேர்க்கும் பொழுது சுவை சற்று கூடுதலாக இருக்கும்.
தேங்காய் சேர்த்தால் அஜீரண கோளாறு ஏற்படும் என நினைக்கும் நபர்கள் அதை தவிர்த்து விடலாம்.

நன்கு தண்ணீர் கொதித்து வரும் நேரத்தில் நாம் வறுத்து வைத்திருக்கும் கேழ்வரகு மாவை தண்ணீருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கட்டிகள் விழாக வண்ணம் சிறிது சிறிதாக மாவு சேர்த்து மாவு இறுகிவரும் நேரம் வரை கலந்து கொள்ள வேண்டும்.

இப்படி கலந்த மாவை ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடலாம். ஐந்து நிமிடம் கழித்து மாவின் மீது அரை தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொடுத்து மாவு தயார் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த மாவினை நாம் விருப்பத்திற்கு ஏற்றவாறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளலாம்.

அடுத்ததாக இட்லி பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒரு தட்டில் அடுக்கி 8 முதல் 10 நிமிடங்கள் நன்கு நீராவியில் வேக வைக்க வேண்டும்.

10 நிமிடம் கழித்து நன்கு வெந்திருக்கும் கேழ்வரகு கார கொழுக்கட்டையை ஒரு தட்டிற்கு மாற்றி சாப்பிட பரிமாறலாம். இந்த கொழுக்கட்டை சாப்பிடுவதற்கு சாஸ், சட்னி என எதுவும் தேவைப்படாது. டீ மற்றும் காபி குடிக்கும் நேரங்களில் இது போன்ற சத்தான கேழ்வரகு மாவு கொழுக்கட்டை சேர்த்து சாப்பிடும் பொழுது உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.