ஆமணக்கு விதையில் இருந்து தயாரிக்கப்படும் ' விளக்கெண்ணெய் ' மருத்துவ குணங்கள் நிறைந்தது. பாரம்பரியமான மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
கண்களுக்கு:
விளக்கெண்ணெயை தினமும் தூங்கச் செல்லும் முன், கண்களைச் சுற்றி தடவிக் கொண்டு படுத்தால் கண் எரிச்சல் குணமாகும். தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் கண் இமைகளில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், இமைகள் அழகு பெறும்.
சருமத்திற்கு:
குளிப்பதற்கு முன், விளக்கெண்ணெயை உடலில் தடவிக் கொண்டு குளித்தால், சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். விளக்கெண்ணெயில் உள்ள புரத மூலக்கூறு, முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. முகப்பருக்கள் மீது தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விளக்கெண்ணெயில் உள்ள ' 'ரிகினோலிக் அமிலம்' சருமத்தில் உள்ள வீக்கம், புண்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. சருமத்தில் ஏற்படும் சிவப்பு, தடிப்பு, அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கும், பூஞ்சைத் தொற்றுக்கும் விளக்கெண்ணெயை சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.
2 ஸ்பூன் விளக்கெண்ணெயில், சுத்தமான பருத்தித் துணியை நனைத்து, முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இது சருமத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
கூந்தலுக்கு:
நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்கலாம்.
தேங்காய் எண்ணெயில் சில துளிகள் விளக்கெண்ணெயை சேர்த்து தினமும் தலைமுடிக்கு தடவி வந்தால், உடல் உஷ்ணம் குறையும்.கூந்தல் மிருதுவாகவும், மினுமினுப்புடனும் இருக்கும்.
விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முடியின் வேர்ப் பகுதியில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின் குளிக்கலாம்.இவ்வாறு வாரமொருமுறை செய்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கும்.முடி உடையாமல் செழித்து வளரும்.
விளக்கெண்ணெயிலுள்ள ' ஒமேகா 9 கொழுப்பு அமிலம்' முடியின் வேர்களுக்கு ஊட்டம் அளித்து, கூந்தலின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது. வாரமொரு முறை விளக்கெண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.கூந்தலில் ஏற்படும் வறட்சி குறையும்.
பாத வெடிப்பு:
பாதங்களில் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் தூங்கச் செல்லும் முன், வெடிப்புகளின் மீது விளக்கெண்ணெயை தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.