Breaking News :

Friday, October 25
.

பெண்கள் வயதுக்கு வரும் அறிகுறிகள்?


பெண்மை மலர்வதன் முதல் அறிகுறி பூப்படையும் சம்பவம். பெண்ணின் உடலில் நிகழக்கூடிய மிக இயல்பான அந்தச் சம்பவம், அவளது உடல் மற்றும் மனத்தில் மிகப் பெரிய மாற்றங்களை உண்டாக்கக்கூடியது.

‘‘மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் பகுதியானது Gonadotropin Releasing Hormone (GnRH) என்கிற ஹார்மோனை விடுவிக்கத் தொடங்கும் போது ஒரு பெண் பருவமடைகிறாள். இந்த ஜிஎன்ஆர்ஹெச் ஹார்மோனானது, எல்.ஹெச் (Luteinizing Hormone (LH) மற்றும் எஃப்.எஸ்.ஹெச் (Follicle Stimulating Hormone (FSH) என மேலும் இரண்டு ஹார்மோன்களை சுரக்கச் சொல்லி, பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்னல் அனுப்பும். பருவமடைகிற இந்த நிகழ்வானது பெண்களுக்கு 10 முதல் 14 வயதில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பூப்படையும் பருவத்து அறிகுறிகள்...

பருவமடையப் போவதன் அல்லது அடைந்து விட்டதன் முதல் அறிகுறியாக ஒரு பெண்ணுக்கு மார்பக வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும். அக்குள், அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சி தென்படும். சில பெண்களுக்கு முகம், நெற்றி மற்றும் முதுகில் பருக்கள் வரலாம்.

மாதவிடாய் அதாவது, உதிரப் போக்கு வரத் தொடங்கும். முதல் மாதவிலக்கு வந்ததை அடுத்து பெண்களின் உயரமும் கிடுகிடுவென அதிகரிப்பதைப் பார்க்கலாம். 2 முதல் 3 வருடங்களில் அவர்களது உயரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

மேலே சொன்ன அறிகுறிகள் பருவ வயதில் இருக்கிற எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை. அதே நேரம் முதல் மாதவிலக்கும் அதையடுத்த அவர்களது சுழற்சியும் எல்லோருக்கும் ஒன்று போல இருக்காது. இந்த வித்தியாசம் பெண்களின் பூப்பெய்தும் வயது, மாதவிடாயின் போதான ரத்தப் போக்கு, அது நீடிக்கும் நாட்கள் என எல்லாவற்றிலும் இருக்கலாம்.

10 முதல் 14 வயது என்பது பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது பொதுவான விதி. ஆனாலும், இது ஒவ்வொருவருக்கும் கூடவோ, குறையவோ செய்யலாம். உதாரணத்துக்கு சில பெண்கள் 7 அல்லது 8 வயதில் கூட பூப்பெய்தலாம்.

அந்த நிலையை Precocious Puberty என்கிறோம். இன்றைய உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, இளவயது மன அழுத்தம் எனப் பல விஷயங்களின் காரணமாக பெண் குழந்தைகளின் பூப்பெய்தும் வயதானது குறைந்து விட்டது உண்மைதான். ஆனாலும், 7 வயதுக்கு முன்பாகவே ஒரு பெண் குழந்தைக்கு பருவமடைதலின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

இன்னும் சில பெண்களுக்கோ பூப்பெய்தும் வயது வழக்கத்தைவிட தள்ளிப் போகலாம். பெரும்பாலும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதைப் பார்க்கலாம். 14 வயதுக்கு மேலும் பூப்படையாத பட்சத்தில் மருத்துவப் பரிசோதனையும் ஆலோசனையும் அவசியம். பூப்படையாததற்கு வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் காரணமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மிக மிக அரிதாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என்பதால் பயப்படத் தேவையில்லை.

பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத்தான். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் 'சத்துள்ள உணவாகச் சாப்பிட வேண்டும்' என்று நினைத்துக் கெட்ட கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையைப் பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால், மாதவிடாய் தள்ளிப்போவது, தைராய்டு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

மேலும் உடல் பருமனால் கருமுட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் (Follicle Stimulating) மற்றும் லியூட்டினைஸிங் (Luteinizing) என்ற இரு ஹார்மோன்களும் பாதிக்கப்படும். இந்த இரண்டு ஹார்மோன்களும் பாதிக்கப்படுவதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் (PCOS) உருவாகி, பிற்காலத்தில் தாய்மை அடைவதும் கேள்விக்குறியாகும்.  எனவே, ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியவது அவசியம்.

கறுப்பு உளுந்து - தோல் நீக்காமல் கறூப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.

நல்லெண்ணெய் - ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு முட்டை - பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.  கம்பு - வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.

பொட்டுக் கடலை - பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும். அசைவ உணவுகள் - மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

கீரை வகைகள் - மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாகற்காய், சுண்டைக்காய் - சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.

சத்து மாவு உருண்டை - கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.  கொண்டைக் கடலை - கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும். இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை. சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும். சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்துவிடும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.