ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று தில்லையில், சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் பாடிய 'திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.
மாணிக்கவாசகர் 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார். எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.
மறுநாள் தில்லை வாழ் அந்தணர்கள் கூத்தபெருமான் சன்னதியில் ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்தனர். அதன் கடைசி ஓலையில், 'மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது' என கையொப்பம் இடப்பட்டிருந்ததைப் பார்த்து திகைத்து மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கேட்டு அவரை அழைத்துவந்து அதன் பொருள் யாது எனக் கேட்டனர்.
மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோல பெருமானைக் காட்டி அனைத்துக்கும் இவர்தான் பரம்பொருள் என்றார். அடுத்தநொடி பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்தார்.
ஆனி மகம் மாணிக்கவாசகரின் குருபூஜை நாள்.
சிவபுராணத்தின் சிறப்புகள் :
திருவாசகத்தின் முதல் பதிகம் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் தொடங்கும்.
முதல் 6 வரிகள் வாழ்க என முடியும். அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும். அடுத்த 8 வரிகள் போற்றி என முடியும்.
இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.
சிவபுராணத்தின் 32 வது வரியில், 'மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்' எனப் பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.
திருவாசகத்தின் 18 வது வரியான 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.
இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும். இது முக்திப்பேறு தரும்.
ரமணமகரிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.
"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என..... இப்படி சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.