முன்னொரு காலத்தில் இருந்து முற்றிலும் அழிந்து போன ஒரு வியாதி இருந்தது.
அதாவது தங்க நகை போட்டுப் பார்க்கும் அளவிற்கு வசதி இல்லாமல், ஏக்கத்தில் வாடும் பெண்களுக்கு கன்னத்தில் வீக்கம் வரும்.
அப்படி வந்தால் அந்த பெண்ணுக்கு யாராவது தங்க நகையை கழுத்தில் அணிவித்து விடுவார்கள். அந்த வீக்கம் மறைந்து போகும்.
பொன்னால் செய்த வளையாபரணங்கள் அணிந்த பெண்கள், வானுயர்ந்த மாடங்களில் வாழ்ந்ததை, அப்பெண்கள் பல்வகை மணிகள் கோத்த வடங்களை அணிந்திருந்ததை, கால்களில் பொன்னால் செய்த பூண்களுடன் பொற்சிலம்பு விளங்கியதை, கைகளில் பொன் வளையல்களோடு இருந்ததை, பொன்னால் செய்த கழங்கு கொண்டு அப்பெண்கள் பந்தாடியதை பெரும்பாணாற்றுப்படை (327-335) அழகுறக் கூறுகிறது.
செல்வச் செழிப்புடன் தலை முதல் கால் வரை தங்க அணிகளோடு வலம் வந்த நம் பெண்டிர் கால்களுக்குத் தங்கம் அணிய மறுக்கவும், மறக்கவும் காரணம் கற்புக்கரசி கண்ணகி.
இன்று விலை உச்சத்தில் இருந்தாலும் தங்கம் போட முடியாத அளவிற்கு யாரும் இல்லை.
ஆனால் இந்த தங்கத்தை அணிந்து கொள்ள சில கட்டுப்பாடுகள் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
நம், அங்கத்தின் அவயங்களை நவக்கிரக ரீதியாக இணைத்துப் பார்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது ஜோதிட சாஸ்திரம்.
அதாவது நவக்கிரகங்களில் ஒன்றான சூரியனை, நம் கண்ணுக்கு இணையாகச் சொல்கிறார்கள்.
சந்திரன் மூச்சு விடக்கூடிய மூக்குப்பகுதி என்கிறார்கள்.
முகமும் முகத்தில் வாய் என்ற பாகமும் இருப்பதால், செவ்வாய்க் கிரகத்தை இணையாகச் சொல்கிறார்கள்.
நம் உடலின் நரம்புகள் புதன் கிரகம்.
வயிறு சம்பந்தப்பட்ட பாகங்களை குருவாகச் சொல்லுகிறார்கள்.
இடுப்பிலிருந்து தொடை வரை இருக்கக்கூடிய பாகங்களை சுக்கிரனுக்கான இடம் என்கிறார்கள்.
தொடையிலிருந்து காலின் பாதப் பகுதி வரை சனி கிரகத்துக்குரிய இடம் என்று சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.
ஆக நம்முடைய பாதம் என்பது சனியின் அம்சம்.
நம் உடலில் வயிறு மற்றும் அதன் தொடர்பான பகுதியை குருவுக்கான இடம் என்று சொல்லுகிறோம்.
தங்கம் குருவின் ஆதிக்கத்தில் உள்ள ஆபரணம்.
அதனால்தான், குருவுக்கு உரிய இடத்தைத் தொடும் படி, குருவின் ஆதிக்கம் நிறைந்த, தங்கத்தாலி, தங்கச் செயின், தங்க டாலர் முதலானவற்றையும் வயிற்றுடன் இணைத்து அணியும் ஒட்டியாணம் முதலானவற்றையும் அணிந்து கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.
குருவின் ஆதிக்கம் நிறைந்த தங்கம் என்பது மகாலக்ஷ்மியின் அம்சம்.
ஆகவே, குருவின் ஆதிக்கம் நிறைந்த தங்கத்தை, மகாலக்ஷ்மியின் அம்சமான தங்கத்தை, இடுப்புக்குக் கீழே அணிவதைத் தவிர்க்கச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.
நாம் ஒருவரிடம் ஒரு பொருளை வாங்கினாலோ அல்லது கொடுத்தாலோ இடது கையைப் பயன் படுத்த மாட்டோம்.
வலது கையில் வாங்கி, வலது கையில் கொடுத்து என்பதுதானே வழக்கம்.
இடது கையில் கொடுப்பது எதிரில் உள்ள மனிதரையும் பொருளையும் மதிக்காததற்குச் சமம் என அறிவுறுத்தியுள்ளனர்.
அதே போலத்தான்,குருவாகத் திகழும் தங்கத்தை, மகாலக்ஷ்மியின் அம்சமான தங்கத்தை காலில் அணிவது மகாபாபம் என்கின்றனர் சாஸ்திர வல்லுநர்கள். இது, இவர்களையும் சரி, தங்கத்தையும் சரி... அலட்சியப்படுத்துவதற்குச் சமம்!
குறிப்பாக காலில் கொலுசாக அணியும் பழக்கம் சில பெண்களிடம் இருக்கிறது.
எவ்வளவு காசுபணம் இருந்தாலும், எது எதை எதில் செய்ய வேண்டும், எது எதை எங்கே அணிந்து கொள்ள வேண்டும் என ஓர் வரையறை இருக்கிறது.
‘தங்க ஊசி என்றால் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?’
என்பது போலத்தான், தங்கம் வாங்கக் காசு இருக்கிறது, வசதி இருக்கிறது என்கிற என்கிற காரணத்தால், தங்கத்தில் மெட்டி செய்து, தங்கத்தில் கொலுசு செய்து காலில் அணிந்து கொள்வதை தவிர்ப்பது என்று ஆச்சார்யப் பெருமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆகவே, தங்கக் கொலுசு, தங்க மெட்டி என்பவை ஒரு போதும் அணிந்து கொள்ளக் கூடாது.