மகாபெரியவாள்,காஞ்சியில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்த காலம்.
அப்போது வயதான ஒரு தாயார், எப்போதுமே மகானைத் தியானித்துக் கொண்டு இருப்பவர். அவருக்கு இரண்டு பெண்கள். அங்கே தன் பெண் ஒருத்தியுடன் வருகிறார். இங்கே வந்த இரண்டாவது பெண் எம்.ஏ. வரை படித்து வேலையில் இருப்பவள்.
திடீரென ஒருநாள் இந்தப் பெண்ணுக்கு சித்தப்பிரமை பிடித்துவிட்டது. முன்னுக்கு பின் முரணாக பேசுகிறாள். அவள் வயதுக்கேற்ற பேச்சு இல்லை. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாள்,நடந்து கொள்கிறாள். இவ்வளவு இளம் வயதில், அதாவது திருமணம் செய்யப் போகும் வயதில் ஒரு பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டால். எந்ததாய்தான் கவலைப்பட மாட்டாள்?
தாய், பெரிய டாக்டர்கள் எல்லோரிடமும் மகளை அழைத்துப் போனார். மாறி...மாறி பல சிகிச்சைகள் தொடர்ந்து நடந்தன. எந்த வைத்தியத்திலும் பலனே இல்லை.
"நீங்கள் உங்கள் மகளை வேலூருக்கு அழைத்துப்போய் அங்கே மூளையில் ஒரு ஆபரேஷன் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று ஒரு வைத்தியக் குழுவே அந்த அம்மாளிடம் சிபாரிசு செய்தனர்.அப்படிச் செய்ய அந்தத் தாய்க்கு மனம் இல்லை.
சதா சர்வகாலமும் காஞ்சிமகானே கதி என்று இருந்தவர், வைத்தியர்கள் இவ்வாறு சொன்னவுடன், காஞ்சி மகானிடம் போய் முறையிட நினைத்து தன் மகளுடன் காஞ்சிக்கு வந்தார்.
அன்று இரவு அவர்களுக்கு மகானின் தரிசனம் கிடைக்கவில்லை. இரவு முழுவதும் ,"ஜய ஜய சங்கரா, ஹர ஹர சங்கரா" வாய் ஓயாமல அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர்.
நினைவே இல்லாமல்,அந்தப் பெண் கத்திக் கத்தி மயக்கமடைந்து விழுந்துவிட்டாள்.
மறுநாள் மகானின் தரிசனம் கிடைக்கவே, அந்த தாய், சர்வேஸ்வரனிடம் தன் மனக்குமுறலை கதறித் தீர்த்து விட்டாள்.
மகானின் அருள் கடாக்ஷம் அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கவே மூன்றாவது நாள் தரிசனம் செய்ய வந்தாள்.
மகாபிரபு அவளை நோக்கி உற்றுப் பார்த்து, "அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி" என்று உத்தரவு போட்டது போலச் சொன்னார்.
அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.
மகானின் திருவடியை தரிசனம் செய்த வண்ணம்,அந்தப் பெண் அபிராமி அந்தாதியைச் சொல்லஆரம்பித்துக் கொண்டிருக்கும்போது இடையில் மயக்கமடைந்தாள். சற்று நேரத்தில் மயக்க நிலை தெளிந்து சகஜமாக இருக்க ஆரம்பித்தாள். அவளுக்கு உடம்பில் அசதி இருந்ததே தவிர, அவள் அப்போதே பூரண குணமடைந்து விட்டாள்.தாய் அடைந்த ஆனந்தத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
"மகாபிரபு" என்று இருவராலும் அலறத்தான் முடிந்தது.
குரு கடாக்ஷம் நம்மீது படுவதற்கு நாம் எந்தத் தவமும் செய்ய வேண்டியதே இல்லை.சதா அவரது நினைவாகவே இருந்து நமது மனதை அவரிடம் சமர்ப்பித்து விட்டால் அதுவே போதும். குரு நம்மை ஆட்கொண்டு நமது லௌகீகத்தைப் பார்த்துக் கொள்வார்.
(டாக்டர்களால் முடியாதது, காஞ்சி மகானால் முடிந்தது!)
பெண்ணின் சித்தப்பிரமை
கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.