Breaking News :

Friday, October 25
.

காமம் அழகானது தான் - சிறுகதை


நாளைய தினம் அலுவலகத்தின் முக்கியமான கோப்புகளைப் பார்வையிட மேலதிகாரி ஒருவர் வருவதாக கூறிய அந்த நிறுவனத்தின் முதலாளி விமல்,  சற்று நேரம் நின்று எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்து விட்டுப் போகுமாறு  உதயாவிடம் கேட்டுக் கொண்டான்.

அவனின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட உதயா, தாயாருக்கு அழைப்பெடுத்துச், சற்றுத் தாமதமாகவே வீட்டுக்கு வருவேன் எனத் தகவல் சொல்லிவிட்டுத் , தனது வேலையை வேகமாகச் செய்யத் தொடங்கினாள்.

நேரம் மாலை ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. அவளுடன் வேலை செய்யும் பெண்களும் வீட்டிற்குச் சென்று விட்டிருந்தனர்.

இறுதியாக நின்ற ஒரு இளைஞனும் தனது வேலையை முடித்துவிட்டு முதலாளியிடம் அதனைக் கொடுத்துவிட்டு வெளியேறினான்.

"கொஞ்சம் நில்லடா !நானும் வாறன்!" என்று அவள் எவ்வளவோ கெஞ்சியும் ,"சினிமாப் படம் பார்க்க நேரம் ஆச்சு!" என்று கூறியவாறு அவனும் ஓடித் தப்பினான்.

இதற்கு மேல் நின்றால் வீட்டிற்குச் செல்வது கடினம் என்பதை உணர்ந்தாலும், முதலாளி எப்படியும் கொண்டு போய் விடுவார் என்ற நம்பிக்கை அவளில் எழுந்தது.  

மிக வேகமாகத் தனது பகுதிகளைச் செய்து முடித்தவள், நேரத்தை பார்த்தபோது, நேரம் ஒன்பதைக் காட்டியது. அதனால் கோப்புகளை எடுத்துக் கொண்டு
விமல் இருந்த அறையை நோக்கிச் சென்றாள் அவள்.

"சேர் (சார்) உள்ள வரலாமா?" என்று அவள் கேட்டபோது, வா... வா உதயா..!" என்றழைத்தான் விமல்.

உடனடியாக உள்ளே நுழைந்த உதயா, அவனின் அருகில் சென்று அந்த மேசையில் கோப்புகளை வைத்தாள்.

சேர்(சார்) எல்லாம் செஞ்சிட்டன். ஒருக்காச் சரி பாருங்க...!எனக்கு நேரம் ஆச்சு. நான் போகணும்...!" என்றாள்.

"சரி பார்க்கிறன். நீ முதல்ல உட்காரு..!" என்றான் அவன்.

அவளும் அவன் எதிர்ப்புறம் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.நேரம் வேறு போய்க் கொண்டிருந்தது. அப்போது வந்த அலைபேசி அழைப்பில் அவன் யாருடனோ பேசிக் கொண்டிருந்தது உதயாவுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.

"ஐயோ போகணும்...!" என்று அவனைப் பார்த்துக் கண்களால் கெஞ்சினாள் உதயா.
அப்போது அவளைப் பார்த்த விமல், "அவசரப்படாத! கொஞ்சம் பொறு...!"என்று சைகையால் சொல்லியவாறே  அலைபேசி உரையாடலைத் தொடர்ந்தான்.

"ஓம் பெரியம்மா எனக்கு விளங்குது. பொண்ணு எனக்கு எதிர்ல தான் இருக்கிறா...!  ஆனா அவங்க தான் இன்னும் சம்மதம் சொல்லல...! அவங்க சம்மதம் என்றா நாளைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம். நான் ரெடி...!"

திடீரென்று அவன் தன்னைப் பற்றி அவனின் பெரியம்மாவிடம் பேசத் தொடங்கியதைக் கேட்டவள், அவனை முறைத்துப் பார்த்தாள்.

கடந்த இரண்டு மாதமாகவே அவன் தன்னை விரும்புவதை அறிந்திருந்த உதயா, அவனிடம் எதுவும் சொல்லவில்லை அதேபோல் அவனும் இன்னமும்  அவளிடம் நேரடியாக அதனைச் சொல்லவில்லை.

முதலில் அவனாகச் சொல்லட்டும் என்று காத்திருந்தவள், தனக்கு முன்னாலேயே அப்படி அவன் சொன்ன போது, தன் மீதான அவனின் காதலை அறிந்து கொண்டாள்.

"ஓம் பெரியம்மா !இண்டைக்குத்தான் (இன்று) அவங்களுக்கு கடைசி நாள். இன்றைக்குச் சொல்லாட்டா நானே அவளைத் தூக்கிக் கொண்டு வந்திடுவன்...!"

இவ்வாறு அவன் அலைபேசியில் உரையாடிய வாறே, அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அவனின் பேச்சும் புன்னகையும் உதயாவின் மனதில் ஏதோ ஒரு மாறுதலை உண்டு செய்து, அவளைப் பரவசமாக்கியது.

இதற்கு மேல் ஒருவன் எப்படித் தனது காதலைச் சொல்வான்?

உதயா ஒரு தொழிலாளி என்று பாராமல் உயர்ந்த இடத்தில் இருக்கும் முதலாளி அவனே இவ்வளவு இறங்கி வரும்போது, அதுவும் தன்னுடைய உறவுகளுக்கே நம்பிக்கையாகச் சொல்லும் போதும் உதயாவால் மட்டும் அதற்கு மேல் பொறுமை காக்க முடியுமா என்ன..?

அவனின் காதலை ஏற்றுக் கொள்வது என முடிவெடுத்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் உதயா.

அதனைப் பார்த்த விமல், "பெரியம்மா கிட்டத்தட்ட எல்லாம் தயார் என்று தான் நினைக்கிறன். நீங்கள் கல்யாணத்துக்கு ரெடி பண்ணுங்க. நான் தூக்கிட்டு வந்திடுறேன்...!"

சொல்லியவாறு அவன் சிரித்தபோது, அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த வாயினைத் திறந்து உதயாவும் வாய் விட்டுச் சிரித்தாள்.

"சரி பெரியம்மா எனக்குக் கொஞ்சம் இங்க நிறைய வேலை இருக்கு. நான் உங்களோட நாளைக்கு கதைக்கிறேன்..!(பேசுறன்)

சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தவன், அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அவன் இறுதியாக சொன்ன வார்த்தைகள் அவளை ஏதோ செய்தது." அப்படி என்ன நிறைய வேலை இருக்கு? என்ன பண்ணப் போறானோ தெரியலையே?" என்று மனதுக்குள் நினைத்த போதே, அவள் சிலிர்த்தாள்.

சாதாரண தொழிலாளியாக இருந்த நான், இன்னும் சில நாட்களில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தக்காரியாக மாறப்போகிறேன். என்று நினைத்தபோதே அவள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருந்தாள்.

"என்ன மேடம்...? ஓஓஓ...இனி இப்படித்தான் உங்களை அழைக்க வேண்டும். ஏனென்டா இனி நீங்கள் தானே இந்தக் கொம்பெனிக்கு(கம்பனி )ராணி...!"

அவ்வாறு அவன் சொன்னபோது, அதிகமாக உணர்ச்சிவசப்பட்டாள்  உதயா.

"ஐ லவ் யூ உதயா!  ஐ லவ் யூ சோ மச்! எனக்கு உன்னை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? இந்த விமலை ஏற்றுக் கொள்வாயா அன்பே...?"

திடீரென்று அவன் இப்படி வாய்விட்டு கேட்டபோது, அவளால் எதுவும் சொல்ல முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்தாள்.

அப்போது அவன் அவளை நோக்கி எழுந்து வந்தான். தன் அருகில் அவன் வருவதை உணர்ந்தபோது, அவளின் இதயம் படபடக்கத் தொடங்கியது. கால்கள் நடுங்குவதை உணர்ந்தவள், ஒருவித பயமும் தன்னில் எட்டிப் பார்ப்பதை உணர்ந்தாள்.

அவளின் அருகில் வந்தவன், அவளின் விரல்களில் தனது விரல்களை வைத்து அழுத்தினான்.
அவன் அவ்வாறு அழுத்தியபோது, அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமற், தலையைக் கவிழ்த்தபடியே இருந்தாள் அவள்.

முதன்முதலாக ஒரு ஆடவனின் கரம் பட்டபோது, ஏதோ ஒரு வித மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வைப் பெற்றாள் உதயா.

மெல்ல அவன் குனிந்து வருவதை அவனின் மூச்சில் இருந்து வெளிப்பட்ட வெப்பக்காற்று, அவளுக்கு உணர்த்தியது.

மெல்லக் குனிந்தவன், அவளின் காதோரம் ஒரு முத்தமிட்டான். அவனின் அந்த முத்தத்தில் கண்களை மூடிச் சிலிர்த்தாள் உதயா.

அடுத்து என்ன செய்யப் போகிறான் என்ற பயமும் பதட்டமும் அவளைத் தொற்றிக் கொள்ளக், கண்களை இறுக மூடிக் கொணடாள் அவள்.

காதிலே முத்தமிட்டவன், சற்று அவளின் கன்னத்தோடு, தனது மெல்லிய தாடியை உரசிபோது  எல்லையில்லா இன்ப அவஸ்தையை உணர்ந்தாள் உதயா.

"ஐயோ கொல்லுறானே?" என்ற சிந்தனை அவளில் எழுந்த போது, அவனின் கரம், அவளின் கன்னத்தைப் பிடித்து தூக்கி, அவனைப் பார்க்கச் செய்தது.

அவனின் கண்கள் சொருகி, அவன் வேறு ஒரு உலகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருப்பதை உணர்ந்த உதயா, அதேபோல் தானும் அப்படியயொரு நிலைக்குத் தள்ளப்ப ட்டுள்ளேன் என்பதையும் அவளால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

தூக்கி வைத்த நெற்றியில், அவன் முத்தமிட்ட போது, மொத்தமாகக் குலைந்தாள் உதயா.
தன்னுடைய கையை அவன் பற்றி அழுத்தி எழுந்து கொள்ளுமாறு கேட்டபோது, அவளும் எழுந்து நின்றாள்.

இப்போது அவன் அவளின் கன்னங்களில் முத்தங்கள் கொடுக்கத் தொடங்கிய போது, அதற்கு மேலும் அவளால் பொறுமை காக்க முடியவில்லை.

வேண்டாம் என்று அவனை ஒதுக்கி தள்ளவும் அவளால் முடித்திருக்கவில்லை. ஏனெனில் அவன் திருமணம் பற்றிய நம்பிக்கையை ஏற்கனவே அவனின் பெரியம்மாவோட பேசியதன் மூலம் வழங்கி இருந்தான்.

அதைவிடவும்  முதலாளி அம்மா ஆகப் போகிறேன் என்ற அவளின் அதீத ஆசையும், அவனை நம்பச் செய்திருந்தது.

சட்டென்று அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு அவனின் நெஞ்சுக்குள் புதைந்தாள் உதயா.
அவ்வாறு அவள் புதைந்த போது, அவளை இறுக்கி அணைத்துக் கொண்ட விமல், அவளின் முகம் முழுவதும் முத்தங்களால் நிரப்பி கழுத்துக்குள் புதையத் தொடங்கினான்.

நேரம் நீண்ட போது, இருவரும் எல்லை மீறத் தயாராகி இருந்தனர். அவனின் மெத்திருக்கையில் (சோபா)அவர்கள் எல்லை மீறலில் ஈடுபட்டார்கள்.

யாவும் முடிந்த போது, எழுந்து உட்கார்ந்து உதயா, மகிழ்ச்சியால் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவளைத் தழுவிக் கொண்ட விமல், அவளிடம் இருந்து விடுபட்டுத் தனது இடத்துக்குச் சென்று, அங்கிருந்த ஒரு பெட்டியில் இருந்து ஒரு பணக்கட்டைத் தூக்கிக்கொண்டு அவளை நோக்கி வந்தான்.

பணத்துடன் தன் அருகில் வந்து கொண்டு இருந்த விமலை ஆச்சரியமாகப் பார்த்தாள் உதயா.
பணக்கட்டுடன் அவளின் அருகில் வந்த விமல், அவளின் கையைப் பிடித்து அந்த பணக்கட்டை அவளின் கையில் வைத்தான்.

தன்னுடைய கையில் திடீரென திணிக்கப்பட்ட பணக்கட்டைப் பார்த்தவள், உடனடியாக அதிர்ந்து போய் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பின்னர் உடனடியாகவே அந்தப் பணக்கட்டைக் கீழே போட்டாள்.

"என்ன விமல் இது? ஏன் எனக்கு காசு தாறீங்க? நான் கேட்கலையே?"

"என் கூடப் படுத்தாய்! அதுக்குப் பரிசு தர வேண்டாமா? அதுதான் இந்தக் காசு. இன்னும் வேணுமா.?"

அவன் அவ்வாறு அலட்சியமாக அதைச் சொன்ன போது, அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற உதயா, கோபத்தில் வெடித்தாள்.

"என்ன விமல் இப்படி சொல்றாய்?" என்னைக் கல்யாணம் செய்ய போறேன் என்று சொல்லி தானே என் கூட வாழ்ந்தாய்? பிறகேன் இப்படிச் சொல்லுறாய்?"

"அடியே உதயா! உனக்கென்ன லூசா? நான் உன்னை எப்படிக் கல்யாணம் செய்ய முடியும்? நீ எனக்கு கீழ வேலை செய்றவள். உன்னை கல்யாணம் கட்டிக்கிட்டு நான் எப்படி வாழ முடியும்? எனக்கென்று அந்தஸ்து இருக்கு. கௌரவம் இருக்கு. அத விட்டுட்டு உன்னைக் கல்யாணம் கட்ட முடியுமா...?"

"அப்ப ஏன் எனக்குப் பொய் சொன்னனீ? உன்ர பெரியம்மாட்டக் கூடச் சொல்லிக் கொண்டிருந்தாயே?"

"ஆக்சுவலா நான் போனே பேசல. சும்மா பேசுறறதா ஆக்ட் பண்ணினேன். நீ நம்பிட்டியா...? ஹா ஹா ஹா...!"

"ஏன் விமல் இப்படிச் செய்தனீங்க? இது உங்களுக்கே சரியாப் படுதா.? உங்களை எவ்வளவு  நம்பினான்! ச் சே....!"

"ஹா ஹா ஹா....! அடியே பைத்தியக்காரி. எனக்கு உன் மேல ரொம்ப நாளா ஆசையா இருந்தது. உன்னை எப்படியாவது அனுபவிக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்திச்சு. நேரடியாக் கேட்டா நீ சம்மதிக்க மாட்டாய். அதான் இப்படி ஒரு பிளான் பண்ணினான்...!"

"அடப்பாவி நம்ப வெச்சுக் கழுத்தறுத்திட்டியேடா...! சீ...இவ்வளவு கேவலமானவனா நீ..?"
"நான் கேவலமானவனாகவே இருக்கட்டும். நீயும் முதலாளியம்மா ஆகணும் என்ற ஆசைல தானே என்னோட படுத்தனீ...? அப்ப நீயும் கேவலமான ஆள் தானே..?"

தன்னை முழுமையாக ஆசை காட்டி மோசம் செய்து விட்டான் என்பதை உணர்ந்த போது உதயாவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"இந்த விசயம் இரண்டு பேரோடையே இருக்கட்டும். எனக்கு அப்பப்ப வேணும் போதெல்லாம் நீ வரணும். உனக்குத் தேவையானதை நான் செய்வன். புரியுதா...? இதை யாருக்கும் சொன்னியோ உன்ர குடும்பத்தையே அழிச்சிடுவன்...!"

விமல் அவ்வாறு மிரட்டிய போது, பயந்து போனாள் உதயா. தன்னுடைய கற்புப் பறிபோய் விட்டது என்பதை உணர்ந்த போது அழத் தொடங்கினாள் அவள்.

இனி அவன் கேட்கும் நேரம் எல்லாம் அவனோடு படுக்கச் செல்ல வேண்டும் என்பதை நினைத்தபோதே, அவளுக்கு அருவருப்பாகத் தோன்றியது.

தலையைக் கீழே குனிந்தவள், அந்தப் பணக்கட்டு அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கண்ணீர்  விட்டாள்.

"சரி சரி புறப்படு...!" நான் டாக்ஸி புக் பண்ணி இருக்கிறன். அவன் வந்து கொண்டிருக்கிறான். நீ அதில வீட்ட போ..! ஆ... அந்தக் காசையும் எடுத்துட்டுப் போ...!"

மிக இலகுவாகத் தன்னைக் கழற்றி விட்டு விட்ட விமலைப் பார்க்கப் பார்க்க, அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.

இவனை ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் அவள் மனதில் எழுந்து நின்றது.
அப்போது தனது இருக்கையில் அமர்ந்து, களைப்பில் தலையைப் பின்னே தொங்க போட்டுக் கண்களை மூடிக்கொண்டு இருந்தான் விமல்.

அப்போது, சுற்று முற்றும் பார்த்த உதயா, ஆப்பிள் பழத்துடன் ஒரு கத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டாள். உடனடியாக அதன் அருகில் சென்றவள், அந்த கத்தியை எடுத்துக் கொண்டு அவனின் அருகில் வந்தாள்.

தனக்குப் பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த விமல், கண்விழித்த போது, கவிழ்ந்திருந்த அவன் கழுத்தில், நேரடியாகக் கத்தியை இறக்கினாள் உதயா.

ஒரே குத்துத் தான். கண்களைத் திறந்த படியே விமல் இறந்து போனான்.
தன்னைச் சீரழித்தவனுக்கு தக்க தண்டனை வழங்கி விட்டேன் என்ற திருப்தியில் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினாள் உதயா.

கண்காணிப்பு கருவி மூலம் நான்தான் அவனைக் கொலை செய்ததைக் கண்டுபிடிப்பார்கள் என்பதை உணர்ந்தவள், இனி ஒரு பெண்ணுக்கு இது போன்ற நிலை ஏற்படக் கூடாது என எண்ணியவள், நேரடியாகக் காவல் நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினாள்.....!
கதை முற்றும்....!

பணத்தைக் கொடுத்து ஒரு பெண்ணின் கற்பை பறித்து விடலாம்  என்று நினைக்கும் கூட்டம், தற்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

உறவு என்பது இரு மனங்களின் சேர்க்கையே!அதில் பணத்துக்கு இடம் கிடையாது. பிடித்த இருவர் சேர்ந்து கொள்வது என்பது அவரவர் உரிமை என்றாலும் இருவரின் முழுச் சம்மதம் அவசியமானது.

சில ஆண்கள் தங்களுடைய பாலியல் தேவைக்காகப் பணத்தைக் கொடுப்பது போல, தற்போது சில பெண்களும் தங்களுடைய சுகபோக நலன்களுக்காக, ஆண்களின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து, அவர்களிடம் பணம் பெறும் அவல நிலையும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது.

காமம் அழகானது தான். அதனை இருவரின் மனமும் ஒருமித்துக் கலந்த பின் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்குள் பணத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்...!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.