Breaking News :

Sunday, May 04
.

மகா பெரியவா கனவில் வந்த காமாட்சி


 ‘பெரியவா’ என்றால், அது காஞ்சிப் பெரியவரைத்தான் குறிக்கும். அவர் கனவில் மாங்காடு காமாட்சி அம்மன் தோன்றி அற்புதம் செய்தாள். அதை பற்றி பார்க்கலாம். 

 

‘பெரியவா’ என்றால், அது காஞ்சிப் பெரியவரைத்தான் குறிக்கும். அவர் கனவில் மாங்காடு காமாட்சி அம்மன் தோன்றி அற்புதம் செய்தாள். மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்படுவதற்கும், அருகேயே ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் காஞ்சிப் பெரியவர் காரணமாக இருந்தார். அது 1952-&ம் வருஷம். ஒவ்வொரு வியாழக்கிழமையும், பெரியவாளைப் பார்க்க லட்சுமி நாராயணன் என்பவர் காஞ்சிபுரம் செல்வது வழக்கம். 

 

அப்படி ஒரு வியாழக்கிழமையன்னிக்கு வந்தப்போது, ”நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்’னு அம்பாள் சொப்பனத்துல பேசினா. எங்கேயோ அம்பாள் கோயில் ஒண்ணு பாழடைஞ்சு கெடக்கு. கண்டுபிடிச்சு சொல்றியா?”ன்னு லட்சுமி நாராயணனிடம் மகாபெரியவா கேட்டார்.

 

”ஒரு வாரம் டயம் கொடுங்கோ”ன்னார் அவர். அடுத்த வாரம் அவரைப் பார்க்க லட்சுமி நாராயணன் சென்றபோது முதல் நாள் ராத்திரி மறுபடியும் அம்பாள் சொப்பனத்துல வந்ததா மகாபெரியவா சொன்னார்.அன்னிக்கு ஒரு யானை வந்து தும்பிக்கையால அவரைக் கைப்பிடிச்சு அழைச்சுண்டு போச்சு. பெரியவா அந்த யானையோடு கிளம்பிட்டா. அவருக்கு மட்டும் அது யானையா தெரியலே. அம்பாளாத்தான் தெரிஞ்சிருக்கு.

 

ரொம்ப நேரம், ரொம்ப தூரம் யானை பெரியவாளை அழைச்சுண்டு போச்சு. பெரியவாளும் அது பின்னாடியே நடந்து போயிண்டே இருந்தா. பல மணி நேரத்துக்கப்புறம் ஒரு மண் ரோட்டுல யானை திரும்பியது. அங்கே கொஞ்ச தூரம் போனதும், யானை மறைஞ்சுடுத்து. அப்படின்னா, அந்தப் பாழடைஞ்ச அம்பாள் கோவில் இங்கேதான் எங்கேயோ இருக்கணும்னு பெரியவாளுக்குத் தெரிஞ்சுடுத்து. ராத்திரி பெரியவா அங்கேயே தங்கறதா தீர்மானம் பண்ணிட்டா. அங்கே ஒரு மாட்டுக் கொட்டகை மாத்திரம்தான் இருந்துது. பெரியவா அதனுள்ளே போய்ப் படுத்து கொண்டார்.

 

வேண்டுவார் வேண்டுவதை அருள வல்லதும், ஸ்ரீ ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான மகா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்தமேரு அங்கு இருந்தும் கூட, அதை தரிசித்துப் பயன்பெறுவதிலே மக்கள் அவ்வளவாக ஆர்வம் இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களது கருணை உள்ளம் வேதனை அடைந்தது.

தான் வழக்கமாகப்படுத்து உறங்கும் கட்டிலுக்கு அடியிலே ஒரு பெரும் புதையல் இருப்பதை அறியாமல், ஒருவன் நாள்தோறும் காலை முதல் மாலை வரையில் பிச்சை எடுத்தே வயிறு வளர்த்து வந்தானாம். 

 

அதே போல், அள்ள அள்ளக் குறையாத ஓர் அளப்பரும் திருவருட் களஞ்சியம் மாங்காட்டிலே இருந்தும், அதை அறியாமல் மக்கள் தம் குறைகளைப் போக்கிக் கொள்வதற்காக எங்கெங்கோ அலைந்து ஏங்கித் தவிக்கிறார்களே என்று மகா பெரியவா இரக்கம் கொண்டார்கள். அங்குள்ள பரம்பரை அர்ச்சகராகிய மறைத்திரு ஏகாம்பர சிவாச்சாரியாரிடத்தில் இது பற்றி உரையாடினார்கள்.

 

அந்த ஏரியாவுக்கு அப்போ மணலி ராமகிருஷ்ண முதலியார்தான் நாட்டாமை. பெரியவா வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு முதலியார் வந்து பார்த்தார். “என்ன செய்யணுமோ, நான் செய்யறேன். பெரியவா கவலைப்படாதீங்கோ”ன்னார். ”24 மணி நேரத்துல சம்ப்ரோட்சணம் பண்ணணும்”னு சொன்னா பெரியவா. மளமளன்னு காரியங்கள் ஆரம்பிச்சுது. 

 

ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போல போட்டனர். புதரும், பாம்புப் புத்துகளுமா இருந்த அந்த இடத்தைச் சுத்தம் பண்ணினார்கள். சின்ன கோபுரம் தெரிஞ்சுது. 

“ஆதிசங்கரர் கர்ப்ப வாசம் இருந்த இடம் இதுதான்”னார் மகா பெரியவா. கர்ப்ப வாசம்னா பத்து மாசம் ஓரிடத்திலே தங்கியிருக்கறது. ”அர்த்த மேரு இங்க பிரதிஷ்டை பண்ணியிருக்கு. அம்பாள் இங்கே உக்ரமா இருக்கா; அவளுடைய உக்ரத்தைத் தணிக்கணும்”னு சொன்னார்.

 

இதையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டுப் பெரியவா மறுபடியும் காஞ்சிபுரம் போயிட்டார். இடத்தை எல்லாம் சரி பண்ணி, கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.

காஞ்சி ஸ்ரீ சங்கராசார்ய சாமிகளின் ஆணையை சிரமேற்கொண்டு, அவர்கள் காட்டிய நெறியே நின்று, ஆலயத்தினுள்ளே நாள் தோறும் தீவிரமான ஜபயோக சாதனையில் ஈடுபடலானார் ஸ்ரீஏகாம்பர சிவாச்சாரியர். அதன் பலனைத்தான் இன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பெருகி வழிகின்ற பக்தர்களின் கூட்டத்திலே நாம் பார்த்து மகிழ்கிறோம்.

 

“உரு ஏறத் திரு ஏறும்” என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை. அந்த நியதிப்படியே, சிவாச்சார்யரின் ஜபயக்ஞம் ஏறஏற, ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது. கோவில் அதிகாரிகளால் எளிதில் சமாளிக்க முடியாத அளவுக்கு, இன்னமும் பெருகிக் கொண்டே வருகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.