Breaking News :

Tuesday, April 15
.

"பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்..."


(வேதத்தை நாடாப்பதிவு செய்வது குறித்து பெரியவாளின் கருத்து)

 

சொன்னவர்-எம்.சுப்புராம சர்மா

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 

வேதங்களில் பல சாகைகள் (கிளைகள்/பகுதிகள்) இருக்கின்றன. சாமவேதத்தில், ஜைமினிய சாகை என்றும்,தலவகார சாகை என்றும் அழைக்கப்படும் பகுதிகள் முற்றிலும் மறைந்துவிடக்கூடிய நிலையில் இருந்தன.

 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒரு பணியாளர் இருந்தார். ராஜகோபால அய்யங்கார் என்று பெயர். கோயிலில் அவருடைய பணி - இரவில் ரங்கநாதப் பெருமாள் பள்ளியறைக்குச் செல்லும்போது, சாம வேதத்தின் இந்தப் பகுதிகளை ஓதுவதுதான். குடும்பம் நடத்துவதற்குப் போதிய வருமானம் இல்லாததால், பகல் நேரத்தில், ஒரு விறகுக் கடையில் கணக்கு எழுதும் வேலையையும் செய்து வந்தார்.

 

ஜைமினிய சாகைக்கு உயிர் கொடுக்க வேண்டுமென்றால், ராஜகோபால அய்யங்காரைக் காப்பாற்றியாக வேண்டும்!

 

அவரையே ஆசிரியராக்கி, போதுமான சம்பளம் கொடுத்து, 1963-ல் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் அவருடைய சிஷ்யர் ஸ்ரீ மகரபூஷணம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு பாடசாலை நடந்து வருகிறது.இதுவரை (2007-கட்டுரை) மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட, இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், நல்ல முறையில் பயின்று தேர்ச்சி பெற்று வித்வான்களாகி இருக்கிறார்கள்.

 

ஸ்ரீ மகரபூஷணத்துக்கு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்தது. ஜைமினீய சாகையை நாடாப்பதிவு செய்துகொள்ள வேண்டுமாம்.

 

ஸ்ரீ மகரபூஷணம், பெரியவாளிடம் வந்தார்.

 

"நான் என்ன செய்யணும்னு உத்தரவாகணும்...."

 

"உன் அபிப்ராயம் என்னன்னு சொல்லு...."-பெரியவா

 

"டேப் செய்வதில் எனக்கு சம்மதமில்லை. ஆனா திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறதாலே பெரியவாளிடம் தெரியப்படுத்தினேன்.

 

வேதத்தை நாடாப்பதிவு செய்வதை பெரியவாள் ஏற்றுக்கொண்டதேயில்லைm. நாடாப்பதிவு செய்வதால் ஏற்படும் தீமைகளை மகரபூஷணத்திடம் விளக்கினார்கள்.

 

மகரபூஷணத்துக்கு பெரியவாள் வாக்கு, பெருமாள் வாக்கு.

 

அவருடைய வேதக்குரல் நாடாவில் பதிவாகவில்லை. 'அரங்கன் கேட்டு மகிழ்ந்தாலே போதும்'என்ற முதிர்ச்சி.

 

இதே மகரபூஷணத்துக்கு அமெரிக்காவிலிருந்தும் அழைப்பு வந்தது. போனால் 'சில லகாரங்களுடன் வரலாம்; பல விகாரங்களுடனும் வரலாம்'.

 

"நான் போகப்போவதில்லை..." என்று சொல்லி தெண்டன் சமர்ப்பித்தார் மகரபூஷணம்.;

 

"ரொம்ப சரி,பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்;.........................பகவான் எப்போதும் காப்பாற்றுவான்..."

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.