Breaking News :

Tuesday, April 15
.

திருக்குறள் கதைகள் - குறள் 11


(மகாகவி பாரதியார் ஒரு பாத்திரமாக வரும் இந்தக் கதை ஒரு கற்பனை என்று கூறத் தேவையில்லை!)

 

மழைக்கு ஒதுங்கி சிலர் ஒரு மண்டபத்தில் நின்று கொண்டிருந்தனர். நின்று கொண்டிருந்தவர்களில் பாரதியாரும் ஒருவர்.

 

பாரதியார் உற்சாகமாக உரத்த குரலில் தாம் இயற்றிய பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.

 

"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்பு வேறொன்று கொள்வரோ? என்றும் ஆரமுதுண்ண ஆசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவரோ?"

 

அவர் அருகில் இருத ஒரு இளைஞன் பாரதியாரிடம் கேட்டான். "ஏன் கவிஞரே. உங்கள் பாட்டின் முதல் அடிக்கு எனக்கு அர்த்தம் புரிகிறது. இரண்டாவது அடிக்கு அர்த்தம் புரியவில்லையே!" என்றான்.

 

"என்ன புரியவில்லை?" என்றார் பாரதியார்.

 

"ஆரமுது என்று குறிப்பிடுகிறீர்களே அது என்ன?"

 

"அருமையான சுவையுடைய அமுது."

 

"ஓ! அப்படியானால் அமுது உண்ண வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கள் குடிக்க மாட்டார்கள். அப்படித்தானே?"

 

"கள் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்குத் தோன்றாது" என்ற பாரதியார், தன் மூக்கை ஒரு முறை சுளித்து விட்டு, "ஆமாம். உன்னிடமிருந்து ஏதோ வாடை வருகிறதே? நீ கள் குடித்திருக்கிறாயா?" என்றார்.

 

"ஆமாம். கவிஞரே" என்றான் இளைஞன்.

 

"குடிப் பழக்கத்தை விட்டு விடு தம்பி. அது உன்னையே குடித்து விடும். உன் குடியையும் கெடுத்து விடும்" என்றார் பாரதியார்.

 

"ஆமாம் கவிஞரே, உண்மையாகவே, அமுதம் குடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் கள் குடிக்கும் ஆசை போய் விடுமா?"

 

"அதில் என்ன சந்தேகம்?"

 

"அமுதம் எப்படி இருக்கும் என்றே எனக்குத் தெரியாதே? அப்புறம் எப்படி அமுதம் குடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வரும்?"

 

"உனக்குக் காதலி இருக்கிறாளா?"

 

"இருக்கிறாள்" என்றான் இளைஞன் சற்றே வெட்கத்துடன்.

 

"அவளை முத்தமிட வேண்டும் என்று உனக்கு ஆசை உண்டா?"

 

பாரதியார் உரத்த குரலில் கேட்ட இந்தக் கேள்வியால் சற்றே நெளிந்த அந்த இளைஞன், "உண்டு" என்றான்.

 

"இதற்கு முன்னால் வேறு எந்தப் பெண்ணையாவது முத்தமிட்டிருக்கிறாயா?" என்றார் பாரதியார்.

 

"அது எப்படி?" என்று ஆரம்பித்த இளைஞன் "இல்லை" என்றான்.

 

"முத்தமிடும் அனுபவம் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே உன் காதலியை முத்தமிட ஆசைப்படுகிறாயே, அது எப்படி?" என்று மடக்கினார் பாரதியார்.

 

"கவிஞரே! உங்கள் காதைக் கொடுங்கள். உங்களுக்கு மட்டும் கேட்கும்படி ரகசியமாகச் சொல்லுகிறேன்" என்ற இளைஞன் "முத்தமிடும் அனுபவம் எப்படி இருக்கும் என்று உங்கள் பாடலிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். அதுவும் கள் குடிப்பதுபோல்தான் இருக்கும்!" என்றான்.

 

"என்னது?" என்றார் பாரதியார் அதிர்ச்சியுடன்.

 

இப்போது இளைஞன் உரத்த குரலில், "கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் கள்வெறி கொள்ளுதடி என்று நீங்கள்தானே பாடியிருக்கிறீர்கள்?" என்று பாடி விட்டு  "அப்படியானால் உங்களுக்கும் கள் குடித்த அனுபவம் இருந்திருக்க வேண்டுமே!" என்றான்.

 

"முட்டாள்! அது குழந்தையைப் பற்றி எழுதிய பாடல். நான் ஒன்றை நினைத்து எழுதினால் நீங்கள் வேறுவிதமாகப் புரிந்து கொள்கிறீர்கள்!" என்ற பாரதியார், "உனக்கு அமுதின் சுவை எப்படி இருக்க வேண்டும் என்று தெரிய வேண்டும். அவ்வளவுதானே? இங்கே வா!" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தபடித் தெருவில் இறங்கினார். தெருவின் நடுவில் நின்று இளைஞனின் முகத்தைத் தன் கையால் உயர்த்தி வானத்தை நோக்கித் திருப்பினார். அவன் வாயை அழுத்தித் திறக்க வைத்தார்.

 

அவன் கொஞ்சம் மழைநீரைக் குடித்ததும் அவனை விடுவித்தார். "இப்போது நீ குடித்தாயே, இதுதான் அமுதம்! எப்படி என்கிறாயா? அமுதம் வானுலகத்தில்தானே இருக்கிறது? மழையும் வானிலிருந்துதானே பெய்கிறது? இந்தத் தூய நீர்தான் அமுதம். தேவர்கள் உயிர் வாழ அமுதம் தேவை. மனிதர்கள் உயிர் வாழ நீர் தேவை. இதை நான் சொல்லவில்லை. என் முப்பாட்டன் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்" என்று ஆவேசமாகக் கூவிய பாரதியார்,

 

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை: உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை"

 

என்று பாடியபடியே அந்த மழையில் ஆனந்த நடனம் ஆடத் துவங்கினார்.

 

குறள் 11:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

 

பொருள்:

உலகத்தில் உள்ள உயிர்களை எல்லாம் வாழ வைப்பதால், மழையை அமிர்தம் என்றே கருத வேண்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.