ஊரின் பெயரை கேட்டவுடன் மற்ற ஊர் மக்களின் நினைவிற்கு வருவது சினிமா மற்றும் மினி கோடம்பாக்கம் என்ற அடைமொழி.
ஏன்?.. அந்த அளவுக்கு எண்ணற்ற படங்கள் பல தென்னிந்திய மொழிகளில் இங்கே படமாக்கப்பட்டுள்ளது. காரணம் வருடம் முழுவதும் காணப்படும் இந்த ஊரின் விவசாயம் சார்ந்த வளங்களும், வனப்புகளும். எங்கெங்கு காணினும் பச்சை வயல்கள், தென்னந்தோப்புகள், தடுப்பணை சிற்றருவிகள், நீரோடைகள், புராதன கோயில்கள் மற்றும் எல்லைக் காவல் தெய்வங்களின் இருப்பிடங்கள். அதிகபட்சம் 10 சதுரகிலோமீட்டர் சுற்றளவு, அதனுள் எத்தனை அழகு? பார்த்து தணியாது. தேனிப் பக்கம் இருந்து ஒரு அரசாங்க அதிகாரி சினிமா ஆசையில் வேலையை உதறிவிட்டு வந்து வெளிப்புற படப்பிடிப்பு எனும் கதவை திறந்து விட, மொத்த தொழிற்சாலையும் வந்து விழுந்த இடங்கள் கோபியும், பொள்ளாச்சியும்...
அத்தகைய சிறப்பு பெற்ற இடங்களைக் காண யாருக்குத் தான் ஆசை இருக்காது..?. அந்த ஆசைத் தீயில் இருவர் Muthu Kumar G Madurai Subbuu வந்து நெய் விட அது பற்றிக் கொண்டு பயணப்பட்டு, அந்த ஊர் மண்ணின் மைந்தர் ராகதேவனின் தீவிர பக்தர் Kannan Natarajan அவர்களின் விருந்தோம்பலில் திக்குமுக்காடி ரசித்த அழகு காட்சிகள் கீழே புகைப்படங்களில்....
பார்க்க வேண்டிய இடங்கள்
1. பவளமலை முத்துக்குமார ஸ்வாமி கோயில் (16 வயது விடலை அதனால் அந்தப் பெயர்)
அருகே சுயம்பு மூர்த்தியாக சிவன்...
பின்னால் முருகனை திருமணம் செய்ய தவம் புரியும் வள்ளி, தெய்வானை
நாட்டாமை, இங்கேயும் ஒரு கங்கை, எங்க முதலாளி , பாண்டித்துரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளது
2. பச்சை மலை பாலமுருகன் கோயில் (8 வயது பாலகன் அதனால் அந்தப் பெயர்)
மலை மேலிருந்து கோபி நகரின் இயற்கை காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.
முருகனருள் பரிபூரணமாக பெற்றவர் நண்பர் kannan natarajan காலையில் கண்விழித்தாலே அவர் முருகனின் முகத்தில் தான் விழிக்க வேண்டும். தினமும் தங்கரத ஊர்வலம் இங்கு சிறப்பு நிகழ்ச்சி.
மேல செல்லும் படிகளின் அருகில் மிக பிரம்மாண்டமாக திருவுருவம் கொண்டு முருகன் அந்த ஊர் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
3. சிஎஸ்கே பங்களா
பாரம்பரிய கட்டுமானம் கொண்ட அருமையான அழகான ஒரு பெரிய வீடு. கோபி- சத்தியமங்கலம் நெடுஞ்சாலையிலேயே உள்ளது.
சாமுண்டி, இங்கேயும் ஒரு கங்கை, கலகலப்பு, இங்கிலீஷ்காரன், ஆணை சின்னதம்பி, பெரிய கவுண்டர் பொண்ணு, மாப்பிள்ளை கவுண்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளது
4. பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில்.
வேண்டியதை நிறைவேற்றும் சக்தி வாய்ந்த அம்மன். பல சமுதாய மக்களுக்கு குலதெய்வம்
கோயில் காளை, நாட்டாமை, பாண்டித்துரை கோயிலுக்கு பின்புறம் ஓடும் ஓடை பாலத்தில் சின்னதம்பி உள்ளிட்ட படங்களில் வந்த இடம் இது.
5. தொட்டிப்பாளையம் அண்ணன்மார் கோயில்
பல ஊர் மக்களின் காவல் தெய்வம்.
சின்னதம்பி இறுதிக் காட்சி, மல்லு வேட்டி மைனர், கோயில் காளை மற்றும் பல படங்களில் நடித்துள்ளது.
6. கருங்கரடு முருகன் கோயில்
ஆலமரங்கள் சூழ்ந்த ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்த முருகன் கோயில்.
பாட்டுக்கொரு தலைவன், வைதேகி காத்திருந்தாள், இங்கிலீஷ்காரன், சாமுண்டி, உழவன் மகன் போன்ற படங்களின் படப்பிடிப்பு நடந்த இடம்.
7. கருங்கரடு - மேவானி வயல்காட்டு சாலை
கரகாட்டக்காரன், கண்ணுபடப் போகுதய்யா, பரம்பரை, நம்ம ஊரு பூவாத்தா, அழகர்சாமி, ராசுக்குட்டி, சின்னமணி, தமிழச்சி, செந்தமிழ் பாட்டு, உழவன் மகன் என பல திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளது
8. கூகலூர் பாரம்பரிய வீடு
உழவன் மகன், மிட்டா மிராசு, முண்டாசுப்பட்டி, பாட்டுக்கு ஒரு தலைவன், கோட்டை வாசல்
9. கொடிவேரி அணை
மொத்த கோபியின் வளமைக்கு முக்கிய நீராதாரம்
ராசுக்குட்டி, இது நம்ம ஆளு, பாட்டுக்கு ஒரு தலைவன், மருதுபாண்டி, தங்கத்தின் தங்கம், சாமுண்டி, நாட்டாமை, எங்க சின்ன ராசா, பாட்டு வாத்தியார் என பல திரைப்படங்களில் வந்துள்ளது
மேலும் பங்களா புதூர், குண்டேரிப்பள்ளம் அணை பல இடங்கள் உண்டு.