Breaking News :

Saturday, April 12
.

கட்டாயம் தரிசனம் செய்ய வேண்டிய பெருமாள் கோயில்கள்?


1. ஆசியாவிலேயே மிகப் பெரிய பள்ளி கொண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ள தலம் திருமயம். மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில் இது மட்டுமே.
2. திருப்பதி ஏழுமலைக்கு மேல் நாராயணகிரி என்ற தலம் உள்ளது. இங்கு ஏழுமலையானின் பாதச்சுவடுகள் உள்ளன. இதனை ஸ்ரீவாரி பாதம் என்பார்கள். பெருமாள் திருமலையில் முதலில் தடம் வைத்த இடம் இது தான் என சொல்லப்படுகிறது.

3. திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெருமாளின் உற்சவ மூர்த்தியின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.
4. உடுப்பியில் உள்ள கிருஷ்ணருக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் புடவை சாத்தி வழிபடும் முறை உள்ளது.
5. ஆந்திர மாநிலம் பத்ராச்சலத்தில் உள்ள ராமர் கோவிலில் உள்ள ஸ்ரீராமர், கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி காட்சி அளிக்கிறார்.
6. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் இருக்கும் மூலவருக்கு தினமும் 3 லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பிறகு இந்த எண்ணெய் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

7. சிவ பெருமானைப் போலவே பெருமாளை மூன்று கண்களுடன் தரிசிக்க முடியும். சென்னை அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன.
8. திருக்கண்ணபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார் கண்ணபுர பெருமாள்.
9. திருச்சிக்கு அருகில் உள்ள வேதநாராயணன் கோவிலில் காட்சி தரும் பெருமாள் நான்கு வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். அதனாலேயே இவருக்கு வேதநாராயணன் என்ற பெயர் ஏற்பட்டது.

10. கர்நாடகாவிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில், ரங்கநாதருக்கு படுக்கையாக இல்லாமல், குடைபிடித்தபடி காட்சி தரும் ஆதிசேஷனை தரிசனம் செய்யலாம். இங்கு ஆதிசேஷன் 7 தலைகளுடன் காட்சி தருகிறார்.
11. திருமலை, கரூர் தான்தோன்றிமலை, கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருச்சி குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோவில்களிலும் தாயாருக்கு தனியாக சன்னதி கிடையாது.
12. ஸ்ரீவைகுண்டத்தில் பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனிக்காமல், ஆதிசேஷன் குடைபிடித்து நின்ற கோலத்தில் காட்சி தருவதை காணலாம்.

13. காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவிலில், பெருமாள் ஜோதி வடிவமாக இருப்பதாக ஐதீகம். இங்கு திருக்கார்த்திகை நாளன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடும் வழக்கம் உண்டு.
14. தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பெருமாளை மூன்றடி உயரம் கொண்ட சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து வழிபடுகிறார்கள். இதன் இரு புறமும் சங்கு, சக்கரம் உள்ளது.
15. மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில் பெருமாள் ஒரு கையை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சயனித்து இருக்கும் கோலத்திலும், சங்கு, சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.