முழுநிலவும்... திருவாதிரையும் கூடிய நன்நாளில்... சிவன், பார்வதியின் ஆசியை பெறுவோம்...!!
திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழி திருவாதிரை அமைகின்றது.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நாள் அற்புதமான நாள். கணவனின் தீர்க்க ஆயுள் வேண்டி பெண்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடும் நாள்.
கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் முழுநிலவும் இணைந்திருக்க, விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இந்த நோன்பு இருக்கின்றனர்.
திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து தாலி சரடு மாற்றி சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதை மாங்கல்ய நோன்பு என்று அழைக்கின்றனர். இந்த மாங்கல்ய நோன்பு (13.01.2025) கடைபிடிக்கப்படுகிறது.
திருவாதிரை விரதம் இருப்பவர்கள் உபவாசம் இருந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். அன்று வீட்டில் முறைப்படி இறைவனை வழிபட்டு நைவேத்தியமாக களி படைக்க வேண்டும். மார்கழி திருவாதிரை நாளில், சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்று முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
வழிபாட்டிற்குரிய நேரம் :
இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை
திருவாதிரை களி :
நோன்பை நிறைவு செய்ய விநாயகருக்கு 18 வகை காய்கறிகள் சமைத்து, திருவாதிரை களி, பச்சரிசி அடையும் சேர்த்து விநாயகருக்கு படைத்து வழிபட்டு அதன்பின் உட்கழுத்துசரடு எனும் மாங்கல்ய நூலணிகளை அணிந்து நோன்பை நிறைவு செய்யலாம். பின்னர் விருந்து சாப்பிட்டு அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.
தாலி சரடு :
வழிபாடு மற்றும் விரதத்தை முடித்துக்கொண்ட பிறகு தாலி சரடு மாற்றும் போது கணவர் கையினால் தாலி சரடு கட்டிக்கொண்டு ஆசி வாங்கலாம். சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த நோன்பிருந்து இறைவனை வழிபடலாம். இந்த நோன்பு நாளில் திருவாதிரை களி படைத்து சாப்பிடலாம். ஆருத்ரா தரிசனம் பார்க்க சிவ ஆலயம் செல்லலாம்.
சிவன், பார்வதியின் ஆசி :
வீட்டில் வடை, பாயாசம், சாதம், சாம்பார், களி என இறைவனுக்கு நைவேத்தியம் செய்யலாம். 18 வகை காய் சேர்த்து சாம்பார் அல்லது கூட்டு செய்யலாம். மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி முப்பெரும் தேவியரை வணங்கி நமது குலதெய்வத்திற்கு படையல் போட்டு வணங்கி அதை கணவருக்கு சாப்பிட படைக்கலாம்.
கணவனிடம் ஆசி பெற்று மஞ்சள், குங்குமம் வைத்து வணங்கலாம். இந்த நோன்பு யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு சிவன், பார்வதியின் அருள் கிடைக்கும். மேலும், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும