உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஜப்பசி, மார்கழி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றது.
இந்த ஆண்டு தை தெப்பத்திருவிழா வருகிற ஜனவரி 31-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அன்று கோவில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் காலை 10.05மணிக்கு மேல் 10.29மணிக்குள் மீன லக்னத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது விழா நடைபெறும் 12 நாட்களும் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கும் காட்சி அளிப்பர்.
விழாவில் வருகிற பிப்ரவரி 05-ந்தேதி சைவ சமய வரலாற்று லீலையும் பிப்ரவரி, 7-ந் தேதி வலைவீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவுக்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி பிப்ரவரி 9-ந்தேதி நடைபெறுகிறது அதைத்தொடர்ந்து பிப்ரவரி 10-ந்தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் பிப்ரவரி 11-ந்தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியும் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி-அம்மன் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
அதன் பின்னர் இரவு 7 மணிக்கு மேல் சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி மீண்டும் கோவிலுக்கு புறப்படுவார்கள். அன்றைய தினம் சுவாமி தெப்பத்திற்கு சென்று மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.