முருகனை ஆண்டி கோலத்திலும் எப்போது தரிசிக்க வேண்டும்?
தந்தைக்கே உபதேசம் செய்தவர் முருகப்பெருமான். அழகன் முருகனாக மட்டுமல்லாமல், ஞான குருவாகத் திகழக்கூடியவர். அவருக்கு உகந்த திதி சஷ்டி திதி, உகந்த நாள் செவ்வாய்க் கிழமை.
ஒருவருக்கான வீரம், தைரியம் ஆகியவற்றை அளிக்கக்கூடிய தெய்வம் செவ்வாய் பகவான். செவ்வாய்க்குரிய அதிபதியாக முருகப்பெருமான். அதனால் செவ்வாய்க் கிழமைகளில்.
அதன் காரணமாக செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானைத் தரிசனம் செய்வது விசேஷமாக பார்க்கப்படுகிறது. நம் இன்னல்களை நீக்கி நற்பலனை அளிக்கக்கூடிய முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசிக்கலாமா, ராஜ அலங்காரத்தில் தரிசிக்கலாமா என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கிறது. எப்போது முருகனின் அந்த அலங்காரங்களை தரிசிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
நாம் அனைவரும் இறைவனை தரிசிக்கும் போது நமக்கான செல்வம் உள்ளிட்ட தேவைகள் என்ன, எந்த பிரச்னைகளை எல்லாம் நாம் தீர்க்க விரும்புகிறோம் போன்ற வேண்டுதலை இறைவன் முன் வைப்பது வழக்கம்.
மற்ற தெய்வங்களை விட முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம், ஆண்டி கோலத்தில் காட்சி தருவது வழக்கம்.
எப்போதெல்லாம் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்?
அனைத்தையும் துறந்த நிலை, ஞானத்தை விரும்பக்கூடிய நிலைதான் முருகனின் ஆண்டிக் கோலம்.
யாருக்கெல்லம தீராத பிரச்னையும், தீரா நோயும் துரத்துகிறதோ அவர்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிப்பதால் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
அதுமட்டுமில்லாமல் மனக்குழப்பத்தில் இருப்பவர்கள், பேச இயலாதவர்கள், மன சஞ்சலம் உள்ளவர்கள், கோபத்தின் உச்சியிலேயே இருப்பவர்கள் உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்கள் சாத்வீக குணத்தை தரக்கூடிய, மனதிற்கு நிம்மதி அளிக்கும் ஆண்டி கோலத்தை தரிசனம் செய்வது அவசியம்.
எப்போது ராஜ அலங்கார முருகனை வழிபடலாம்?
புதிய வாழ்க்கையை தொடங்குபவர்கள், திருமணம் நடக்கும் போது, புதுமனை புகு விழாவிற்கான முன்னேற்பாட்டின் போதும், கிரகப்பிரவேசத்தின் போதும், வீடு விற்பதற்கான செயலை தொடங்கும் போதும், அல்லது அதை விற்கும் போதும், நாம் ராஜ அலங்கார கோலத்தில் இருக்கும் முருகப்பெருமானை தரிசனம் செய்வது நல்லது.
எளிதில் விளங்கும்படி கூறவேண்டுமானால், நம்மால் சமாளிக்கக்கூடிய பிரச்னைகளை செய்யத் தொடங்கும் போது ராஜ அலங்காரத்தை தரிசிக்கலாம். இறைவன் அந்த செயல்களை நிறைவேற துணைக்கு நிற்பார்.
அதுவே நம்மால் கையாள முடியாத மருத்துவ சிகிச்சை, நோய், கடன் பிரச்னை, வறுமை என நம்மால் கட்டுப்படுத்தமுடியாத பிரச்னைகளை தீர்க்க முருகனின் ஆண்டி கோலத்தை நாம் தரிசிப்பது உத்தமம்.
பொதுவாக முருகப்பெருமானின் எந்த ஒரு அலங்காரத்தை தரிசித்தாலும், நமக்கு ஞானத்தை தரக்கூடியவர். ஒருவருக்கு ஞானம் கிடைத்தாலே அவன் சரியான பாதையில் சென்று பிரச்னைகளை தீர்த்து, இன்பமான பாதையில் பயணித்து வாழ்கையை வழி நடத்துவான். அதனால் நாம் தவறாது முருகப்பெருமானை வழிபடுவது அவசியம்.
அவருக்குரிய கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட பாடல்களைப் பாடி தரிசனம் செய்ய மன தைரியம் உண்டாகும்.