பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனி பகவானே ஆவார்.
பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவகிரகமாக சனி கருதப்படுகிறார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட சனிபகவானின் பார்வையை, சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதனால் சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாது. கோவில்களில் இரண்டு பக்கங்களில் நின்று தான் வழிபட வேண்டும்.
சனிபகவான் என்று மட்டும் இல்லை, கோயிலில் உள்ள எந்த தெய்வத்தையும் நேருக்கு நேர் நின்று தரிசிக்கக்கூடாது.
தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தி நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற தெய்வ வாகனங்களுக்கு மட்டுமே உண்டு.
நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இதை ஸ்தான பலம், ஸம்யோக பலம், திருஷ்டி பலம் என்று கூறுவர்.
சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனி பகவானுக்கு பிடித்தமான ஒன்றாகும். எனவே இந்த வழிபாடு மேற்கொள்பவர்கள் சனியின் பார்வையிலிருந்து தப்பலாம்.
சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வரும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் ஏதேனும் ஒன்றில் சனி பகவானுக்கு விரதம் தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
இயற்கையிலேயே அசுப கிரகமான சனி கிரகத்தின் 3, 7, 10ம் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், சனீஸ்வரரை நேருக்கு நேர் நின்று தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள்.
சனிபகவான் புராணக்கதை
நவகிரகங்களை தனது கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்தான் இலங்கை வேந்தன் ராவணன். இவன் சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் படுக்கவைத்து, அவர்களின் மார்பின் மீது கால்களை வைத்து மிதித்துக்கொண்டு அரியணை ஏறும், இறங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.
இதற்காக நவகிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளில் வரிசையாக மேல்நோக்கி படுக்கவைக்கப்பட்டிருந்தது. ஆனால், சனி கிரகம் மட்டும், தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால் மேல் நோக்கிப் பார்க்காமல், கீழ் நோக்கி குப்புறப் படுத்திருந்தது.
ராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நாரதர், ராவணன் சபைக்கு வந்தார். அங்கே ராவணன் நவக்கிரகங்களை தனது காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், "ராவணா, உனது கட்டளையை மதித்து இந்த நவகிரகங்கள் அனைவரும் மேல்நோக்கி படிகளில் படுத்திருக்கிறார்கள். ஆனால், சனி கிரகம் மட்டும் உன்னை அவமதிக்கும் வகையில் கீழ் நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா?" என்று கூற, ராவணனும் சனி கிரகத்தை மேல் நோக்கிப் படுக்கச் சொன்னான்.
தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்காததால், சனி கிரகமும் படிக்கட்டில் மேல் நோக்கியபடி திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனி கிரகத்தை மார்பில் மிதித்து ஏறுகையில், சனி கிரகத்தின் குரூரமான பார்வை ராவணனின் மீது விழுந்தது. அப்போது முதல் ராவணனுக்கு ஏழரை ஆரம்பித்தது. அதன்பின், சில காலங்களிலேயே இராமனின் கையால் வீழ்த்தப்பட்டு மடிந்தான் இராவணன்.
நாரதரும் தான் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் அங்கிருந்துப் புறப்பட்டார். புராணத்தில் கூறப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பதே சிறந்தது என்பதை அறியலாம்.
சனிக்கிழமை தோறும் நவக்கிரகம் சுற்றும் பழக்கம் உள்ளவர்கள், சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் சன்னதிகளின் இரு பக்கங்களில் நின்று வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வையால் நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.
மேலும், ஏழரை சனி, பாதச் சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி நடைபெறும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சனிபகவானுக்கு 27 தடவை சுற்றி வந்து எள் விளக்கு ஏற்றி வந்தால் சனீஷ்வரனின் தாக்கம் குறைந்து, ஆபத்துகள் விலகும் என்பது ஐதீகம்.