மிகவும் புனிதமான இந்து சமயக் கோவில்களில் ஒன்றாகும், வைஷ்ணவ தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத் தலமாகும், இந்த கோவில் இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணவ தேவி மலையில் அமைந்துள்ளது. மாதா ராணி , வைஷ்ணவி போன்ற பெயர்களால் அழைக்கப்படும் வைஷ்ணவ தேவி, இந்து சமயப்படி, பெண் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் (7.45 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8,00,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.
திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக வழிபாட்டாளர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இக்கோவிலை ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் குழு பராமரித்து வருகிறது. உதம்பூர் என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை மேற்கொள்வதற்காக இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஜம்மு விமானநிலையமாகும். இங்கு அதிகமான விமான போக்குவரத்து உள்ளது. அனைத்து உள்ளூர் விமான சேவை வழங்கும் நிறுவனங்களும் ஜம்மு விமான நிலையத்திற்கு சேவைகள் வழங்கி வருகின்றன.
வைஷ்ணவ தேவி மலைக்கோயில் ஜம்மு நகரத்திலிருந்து 40 கி. மீ., தொலைவில் உள்ள, கட்ரா எனும் நகரத்திற்கு அருகில் 13 கி. மீ., தொலைவில், இமயமலையில் அமைந்துள்ளது. இக்கோயில் இமயமலையில் 5200 அடி உயரமுள்ள திரிகூடமலையின் உச்சியில் இருக்கும் இந்த புனித குகை கோயில், முப்பெரும் தேவியர்களின் (பார்வதி), (சரசுவதி) மற்றும் (இலக்குமி) உறைவிடமாகும். ஜம்முவிலிருந்து 42 கி.மி. தொலைவில் இருக்கும் இந்த குகை, 30 மி. நீளத்தையும், 1.5 மீ. உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த குகையின் முடிவில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, இலக்குமி, மற்றும் சரஸ்வதி அருவ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது
இந்து புராணக் காப்பியத்தின் படி, இந்தியாவின் தெற்கு பாகத்தில் ரத்னாகர் சாகர் என்பவர் வீட்டில் அன்னை வைஷ்ணவ தேவி பிறந்தார், மாதாவின் இவ்வுலக பெற்றோர் நீண்ட நாட்களுக்கு குழந்தை பேறு கிடைக்காமல் வாழ்ந்து வந்தனர். தெய்வீக அம்சம் நிறைந்த இக்குழந்தை பிறக்கும் முன் நாள் இரவன்று, ரத்னாகர் குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யமாட்டேன் என்று வாக்களித்தார். குழந்தைப்பருவத்தில் அன்னை வைஷ்ணவ தேவி, திரிகுடா என அழைக்கப்பெற்றார்.
பிறகு அவர் பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என அழைக்கப்பெற்றார். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார். திரிகுடா ராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். ராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தது.
திரிகுடா ராமரிடம் அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். ராமர் அவரிடம் இந்த தெய்வீகப்பிறப்பில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார். இருந்தாலும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.
அதேசமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அன்னை அவர்கள் 'நவராத்திரி'யின் பொழுது ராமர் ராவணனுக்கு எதிராக வெற்றி காண்பதற்காக நோன்பு மேற்கொண்டார். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.
ராமர் அவர்கள் அனைத்து உலகமும் அன்னை வைஷ்ணவ தேவியின் புகழைப்பாடுவார்கள் என வரமளித்தார். திரிகுடா மிகவும் புகழ்பெற்ற அன்னை வைஷ்ணவ தேவியாக மாறுவார் மேலும் என்றென்றைக்கும் அமரராக நிலைத்திருப்பார். காலம் செல்லச்செல்ல, அன்னை தெய்வத்தைப் பற்றிய மேலும் கதைகள் வெளிவந்தன. அது போன்ற ஒரு கதையே ஸ்ரீதரருடையது.
அன்னை வைஷ்ணவ தேவியின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பக்தர் ஸ்ரீ-தராவார். அவர் தற்போதைய கத்ராவில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹன்சாலி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தார். ஒரு முறை அன்னை அவர்கள் அவர் முன்னால், ஒரு மிகவும் அழகான மனதை கொள்ளை கொள்ளும் இளம் பெண்ணின் உருவத்தில் காட்சி தந்தார். அந்த இளம்பெண் அடக்கமான பண்டிதரை ஒரு 'பண்டாரா' என்ற விருந்தைப் படைக்குமாறு கேட்டுக்கொண்டார். (ஆண்டிகள் மற்றும் பக்தகணங்களுக்கு உணவளிக்கும் விருந்து)
பண்டிதரும் கிராமத்திலும் அருகிலுள்ள இடங்களிலும் வசிக்கும் மக்களை விருந்துக்கு அழைக்கப் புறப்பட்டார். அவர் 'பைரவ் நாத்' என்ற பெயர் கொண்ட சுயநலம் வாய்ந்த அரக்கனையும் விருந்திற்கு அழைத்தார்.
பைரவ் நாத் ஸ்ரீ-தரிடம் அவர் எவ்வாறு அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளாய் என்று கேட்டார். தவறுகள் நிகழ்ந்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சுட்டிக்காட்டினார். இதனால் கவலையுற்று பண்டிதர் அமர்ந்திருக்க, தெய்வீக அம்சம் பொருந்திய அந்தப்பெண் மீண்டும் அவர் முன் தோன்றி, அனைத்து ஏற்பாடுகளும் நடந்தேறும், அதனால் அவர் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறினாள். அக்குடிசையில் 360 க்கும் மேற்பட்ட பக்தர்களை அமர வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அவர் வாக்களித்த படியே பண்டாரா என்ற அந்த விருந்து மிகவும் இனிதாக நடந்து முடிந்தது.
பைரவ் நாத் அந்த தெய்வீகப்பெண்ணிடம் இயற்கைக்கு மாறான சக்திகள் இருப்பதை ஒப்புக்கொண்டார் மேலும் அவரை மேற்கொண்டும் சோதிக்க முடிவுசெய்தார். அவர் அந்த தெய்வீகப்பெண்ணை திரிகூட மலைகளில் தேடி அலைந்தார். 9 மாதங்களுக்கு பைரவ் நாத் அந்த மலைகளில் அந்த மாயம் நிறைந்த பெண்ணைத் தேடி அலைந்தார், அவர் அந்தப்பெண்ணை அன்னை தெய்வத்தின் அவதாரம் என்றே நம்பினார். பைரவிடமிருந்து ஓடிப்போகும் பொழுது, தேவி அவர்கள் ஒரு அம்பை பூமியில் செலுத்த, அவ்விடத்தில் இருந்து நீரூற்று பெருகியது. அவ்வாறு விளைந்த ஆற்றின் பெயரே பாணகங்கை ஆகும்.
பாணகங்கை ஆற்றில் குளிப்பதால் (பாணம்: அம்பு), அவர்கள் இழைத்த அனைத்து பாவங்களையும் கழுவி போக்குவதோடு, அன்னை தெய்வத்தின் அருளையும் பெறலாம் என அன்னை தெய்வத்தின் மேல் பற்று கொண்டவர்கள் நம்புகின்றனர். இந்த ஆற்றின் கரைகளில் தேவியின் காலடிச்சுவட்டுகள் பதிந்துள்ளது மேலும் இன்றும் அச்சுவடுகள் அதே போல் விளங்குவதை நாம் காணலாம், அதனால் சரண் பாதுகா என்று பக்தியுடன் இந்த ஆற்றின் கரைகள் மக்களால் இன்றும் போற்றப்படுகின்றன. அதற்கு பிறகு வைஷ்ணவ தேவி அத்கவரி என்ற இடத்தின் அருகில் உள்ள கர்ப் ஜூன் எனப்படும் பாதுகாப்பு நிறைந்த குகையில் தஞ்சம் அடைந்து, 9 மாதங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தார் மேலும் அதன் மூலமாக ஆன்மீக அறிவு மற்றும் ஆற்றல்களைப் பெற்றார். பைரவர் அவரை கண்டுபிடித்த பொழுது அவருடைய தவம் கலைந்தது.
பைரவர் அவரை கொலை செய்ய முயற்சித்தபொழுது, வைஷ்ணவ தேவிக்கு மகா காளியின் உருவத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்னை இறைவியின் இந்த உருமாற்றம் தர்பார் என்ற இடத்திலுள்ள புனிதமான குகையின் வாயில் அருகே நிகழ்ந்தது. அதற்குப்பின் அன்னை தெய்வம் மிகவும் ஆக்ரோஷத்துடன் பைரவரின் தலையைத் துண்டித்தார், அதன் விளைவாக துண்டித்த மண்டை ஓடானது பைரவ் காடி என்று அழைக்கப்பெறும் புனித குகையில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தில் சென்று விழுந்தது.
இறக்கும் தருவாயில், பைரவர் தன்னை மன்னிக்கும் படி அன்னையிடம் வேண்டிக்கொண்டார். பைரவர் முக்தி அடைவதற்காகவே அவரைத் தாக்கினார் என்பதை அன்னை தெய்வம் அறிந்திருந்தார். அவர் பைரவருக்கு மறுபிறவி என்ற காலச்சக்கரத்தில் இருந்து முக்தி அளித்தார். மேலும், ஒவ்வொரு பக்தனும், அன்னை தெய்வத்தின் தரிசனம் பெற்றபின்னர் புனித குகையின் அருகிலிருக்கும் பைரவ நாதரின் கோவிலுக்கும் தவறாமல் சென்றால் மட்டுமே பக்தர்கள் அவர்களுடைய புனித யாத்திரையின் பலனைப் பெறுவார்கள் என்ற வரத்தையும் பைரவனுக்கு அளித்து அருள் பாலித்தார். அதேநேரத்தில் வைஷ்ணவ தேவி தன்னை மூன்று சூலங்களுடைய (தலைகள்) கல்லாக உருமாற்றம் செய்து கொண்டார் மேலும் என்றென்றைக்கும் மீளாத தவத்தில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார்.
இதற்கிடையில், பண்டிதர் ஸ்ரீ-தர் பொறுமை இழந்தார். அவர் கனவில் கண்ட அதே வழியை பின்பற்றி திரிகூட மலையை நோக்கி நடந்து இறுதியில் குகையின் வாயிலை அடைந்தார். அவர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வழிகளில் 'திரிசூலத்தை' வழிபட்டார். அவருடைய வழிபாட்டைக்கண்டு இறைவியின் உள்ளம் குளிர்ந்தது. அன்னை அவர் முன் தோன்றி அவரை வாழ்த்தினார். அந்த நாள் முதல், ஸ்ரீ-தர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அன்னை வைஷ்ணவ தேவியை வணங்கி வருகின்றனர்.